புரியாத கவிதையை போல
ஆழ்ந்து மீண்டும் மீண்டும்
உன்னை வாசிக்கிறேன்
சொற்களின் இண்டுகளில்
மிக கமுக்கமாய் உலவும் அர்த்தத்தை போல
புலப்படாமல் இருக்கின்றன
என் மீது நீ வைத்திருக்கும் அபிப்ராயங்கள்
உன் அபிப்ராயங்களை
ஊகிக்க முயலும் என் எண்ணங்கள்
அக்கவிதையிலுள்ள இருண்மையான வார்த்தைகளை போல
வரிசையாகவும், தனித்தனியாகவும்
குழுகுழுவாகவும், கூட்டுத்தொடராகவும்
ஊர்ந்திருக்கின்றன
கவிதை நெடுக திரியும்
நிச்சலனம் உன் முகரூபம் கொண்டிருக்கிறது
உன் விழிகளின் பார்வையும்
உதடுகளின் புன்னகையும்
புதிர் விலகா குறியீடுகளை போல
அரூப காட்டில் தள்ளி
மீள இலயலா தவிப்பில் என்னை தொலைக்கின்றன..
வாக்கியமும் வார்த்தையும்
குறியீடும் படிமமும்
முன்னும் பின்னும்
கீழும் மேலும்
இடம் பெயராமல் இருப்பதை போன்று
மனதுக்குள் எம்மாற்றமுமில்லாமல் இருக்கிறாய் நீ
புரியாமலும்.....
2 கருத்துகள்:
word verification நீக்கினால் நிறைய பேர் கருத்திடுவார்களே
கருத்துரையிடுக