Photobucket

வெள்ளி, 6 மார்ச், 2009

சுயப்புலம்பல்




காதாடும் தோடுக்கும் கதப்பாடும் குழலுக்கும்
வாதாடும் இதழுக்கும் வட்டாடும் விழியினுக்கும்
தோதான உவமைகள் தொகைதொகையாய் எடுத்தெழுதும்
சாதாரண வாழ்வொன்றில் சரிந்துதிர்ந்து போவேனா

நயவுலகு ஆசைகளின் நயனத்தில் எனையிழந்து
வயமாகி வாழ்வினின்ப மயக்கத்தில் மூழ்கிமூழ்கி
தயவான உன்னன்பின் தண்மைதனை உணராத
பயன்கெட்ட பிறப்பென்ற பதத்தோடு சாவேனா

போதைதரும் பொருளெல்லாம் போகமென்று சேகரித்து
சூதைவிட கொடியவனாய் சுகத்துக்கு அலைந்தலைந்து
பாதையென்று பார்வைபட்ட பக்கமெல்லாம் போய்தோய்ந்து
வேதப்பொருள் உன்நினைவை வேண்டாமென் றுவிடுவேனா

முத்தணைக்கும் மங்கையரின் முறுவலுக்கு முன்விழுந்து
அத்தனைக்கும் முதலான ஐயுருவ பொருளுன்னை
சித்தணைத்து அருள்ஞான தத்துவத்தை அடையாமல்
பித்தளிக்கும் சிருங்கார பெருஞ்சேற்றில் புரள்வேனா

அங்கமெல்லாம் அண்டுகிற அந்தரங்க ஆசைகட்கு
தங்கமலர் தோகையரால் சிங்கார புனைவுசெய்து
சங்குஊதி சாமரமும் சங்கடப்ப டாதுவீசி
மங்குகிற ஆயுளதில் மங்கித்தேய்ந்து தீர்வேனா

எப்பழுதில் ஆழ்வேனோ எப்படித்தான் வாழ்வேனோ
முப்பாலின் முடிவுப்பாலில் முடிச்சுண்டு முடிவேனோ
அப்பாலுக்கு அப்பாலேகி அப்பழுக்கு அற்றவுந்தன்
கப்பலுக்கு காத்திருப்பே னோசொல்க பெரும்பொருளே!

செவ்வாய், 3 மார்ச், 2009

கரப்பான் பூச்சி வார்த்தைகள்



மெல்லிய மேனியின்
உள்ளிருந்து ஒரு பயம்
ஆபாய அதிர்வுகளை
அனுப்பிக் கொண்டிருந்தாலும்
உன் வற்புறுத்தலுக்கு மடங்கி
வர சம்மதித்தேன்..

வீட்டில் வெவ்வேறு பொய்யுரைத்து
ஊருக்கு தெரியாமல் துப்பட்டாவில்
முகம் மறைத்து
புறப்பட்டேன் உன்னுடன்..

வெயில் ததும்மும் சாலையில்
வேகம் குறையாமல் வாகனத்தை நீ முடுக்க
தேகம் பிரியாமல் நானுன்னை பிணைக்க – இன்ப
போகம் தளராமல் பயணித்தோம்

மனித நகர் விலகி
தனிமை நகர் நுகர்ந்தோம்
மணிக்கணக்கு தெரியாமல்
இனிக்க இனிக்க இன்பமுண்டோம்..

கண்ணாமூச்சி விளையாடினோம்
களைக்கும் வரை ஓடிப்பிடித்தோம்
என்னென்னவோ பேசிக்களித்தோம்
எண்ணியவை எல்லாம் செய்தோம்..

கோயில் சிலை மார்புகளையும்
குணமிழிந்து பார்க்கும்
கொடுங்காம பூனைகள்
குறுக்கிட்டன நமக்குள்

பட்டாம் பூச்சியாய்
பறந்திருந்த என்னை, விரலடைத்து
நிறம் பூசிய சிறகை பிய்தெறிந்து
சுவைக்க என்னுடலை
சவைத்து உண்ட மூர்க்கதனங்களை
நீயும் பார்த்துதானிருந்தாய்
எதிர்க்க துணிவின்றி..

கூட்டி குவித்து
குப்பையாய் என்னை வாரி
மீண்டும் வீட்டில் வீசி சென்றுவிட்டாய்..


அடுத்த மணி அடிக்கவிடாமல்
எடுப்பாய் என் அழைப்புகளை
சமீபங்களில் கடைசிவரை
அடித்தாலும் பதிலில்லை..


உன் நண்பர்கள் வழியே
அணுமதி பெற்று
அலுவலகம் வந்தேன்
உன்னை காண..

ஆறுதலாய் உன் தோள்களில் சாய்ந்து
அழுதென் பச்சை துயரங்களை எல்லாம்
சருகாக உகுக்க வேண்டும்
என்றெண்ணி வந்த என்னை
பந்திக்குப்பின் எறியும் இலையாய்
சந்திப்பில் நீ பார்த்தாய்..

“என்னை பார்க்க வேண்டும் என்றாயாமே ?”
“என்ன விஷயம் ?”
“எதுவும் உதவி வேண்டுமா ?” என்று
அந்நியனாய் அசைந்தன உன் இதழ்கள்


“பணமேதும் தேவையென்றாலும்
தயங்காமல் கூறு” என்று
கரப்பான் பூச்சியாய் ஊறிய வார்த்தைகள்
உண்டாக்கியது
உன்மீது அருவருப்பை..

“உன்னை காதலித்ததற்கு
அந்த காமுகர்களுக்கு
ஆசை நாயகியாய் இருந்திருக்கலாம்”
என்று அலறத்தோன்றியது எனக்கு

ஞாயிறு, 1 மார்ச், 2009

புல்லாங்குழல்
















துளை துளையாய் கசிந்து
இழை இழையாய் எமது
இறுக்கத்தை களைய
எங்கு கற்றாய் ?

வறுமை சூரியன்
வயிற்றை சுடுகையிலும்
குளுமையை இதழ்களில்
குழுமிட வைக்க
உனக்கே இயல்கிறது..

கண்ணீர் முட்டி
கரையுடைகிற கண்களில்
உறக்கத்தை ஊட்டி
இமைகளை பூட்ட
உனக்கே தெரிகிறது..

உடைப்பை திறந்து
உனது வெள்ளம் பாய்கையில்
இழப்பே நிவாரணமாகிறது..

உன் துளை திரியில்
இசைதீ ஏற்றபடுகையில்
மெழுகாய் உருகி கரைகிறது
மென்மையற்ற இதயங்களும்..

காதலன் விரல் தொடும் போது
கண்மூடும் பெண்ணை போல
நீ வருடும் போது
மூடிவிடுகின்றன எம்
புலன்களின் இமைகள்..

உன்னை
தடுப்பு போட்டு
தனிமையில் தேங்கையில்
விடுப்பு போட்டு
வெளியேறுகிறது விரக்தி..

பெண்ணோடு உதடு ஒட்டையில்
பேரின்ப சுவர்கள் திறந்திடும்
உன்னோடு உதடு ஒட்டையில்
உறைந்த நாளங்கள் எழுந்திடும்..

-ஆதி