எவ்வளவு முயன்றும்
துல்லியமாய் வரைய
இயன்றதில்லை அதையும்
உன்னை போலவே
ஒரு
கவிதையின் வர்ணனையைப் போலவோ
கதையின் ஒரு காட்சியை போலவோ
அது ரசனைக்குரியதாய் இருக்கவில்லை
உன்னைவிடவும்
முழுவட்டநாளில்
வெண்மஞ்சளொளியோடு
அது மிக பிரகாசித்தாலும்
உன் குழலுதிர்த்த ஒரு மல்லிகை பூவுக்கு
ஒப்பாவதில்லை
வனாந்திரம் வனாந்திரமாய்
ஊர் ஊராய் அலைந்து தேய்ந்து
உன் காதின் ஒற்றைக் கம்மல் போலிருக்கும்
கடைசி பிறை தினத்தில்
அதை கொஞ்சம் ரசிக்காமல் இருந்ததில்லை
தன்னுடைய ஏதாவது
ஒரு ரூபத்தால் அது
உன்னை எனக்கு
ஞாபகமூட்டிக் கொண்டே இருக்கிறது
சட்டைப் பையில் மறையும்
நாணயமென
அது முழுமுற்றாயாய் மறையும் நாளில்
கவியும் இருளில்
ஊற்றி வைக்கிறது
ஜீரணிபதற்கு சாத்தியமற்ற
நீயில்லாத வெறுமையின்
கொடுங்கசப்பை