Photobucket

வெள்ளி, 21 மே, 2010

தலைப்பற்ற கவிதை - 3





பரிமாறிக்கொள்ள
பிரிவதற்கு முந்தையதோ
பிரிவிற்கு பிந்தையதோவான
நினைவுகள் நம்மிடம்
எதுவும் இருந்திருக்கவில்லை
அந்த சந்திப்பில்..

என் புது உறவுகளைப் பற்றிய
பெருமித வார்த்தைகளோ
ஏகாந்த காலங்களில் உற்ற
வலி துயரைங்களையும்
பகிர்ந்து கொள்ளவில்லை..

மௌனத்தின் கதவுகளை பலமாய் சாத்திக் கொண்டு
நம்மில் ஒருவர் உதிர்க்கப் போகிற
முதல் வார்த்தைக்காக
காத்து கிடந்திருந்தோம்..

உன் எதிர்ப்பார்ப்புக்கள் என்னுடையதையும்
என் எதிர்ப்பார்ப்புக்கள் உன்னுடையதையும்
எதிர்நோக்கி ஏக்கத்தவமிருந்ததை உணர்ந்திருந்தும்
இருவரும் நம் ஆங்கார அரியனையில்
அழுத்தமாய் அமர்ந்திருந்தோம்..

இதே ஆகாரந்தான்
அன்றொரு பிரிவுக்கு ஆதாரமாய் இருந்தது..
இன்றும் நம் களையாத மௌனத்தின்
கதவாய் இருக்கிறது..

நாம் நிறைய மாறி இருக்கிறோம்
உருவத்திலும்..
வாழ்விலும்..
என்றாலும்
மாறாமல் இருக்கிறது
நம் ஆங்காரம்
நம் காதலைப் போல்..

தலைப்பற்ற கவிதை - 2




ஏளன சிரிப்பின்
நிசப்தமான அரக்க ஓசைகள்
செவிப்பறை கிழிய
அதிர்ந்தது அன்றொரு நாள்..

அந்த சிரிப்புக்கான காரணம்
என் இயலாமையாகவோ
என் அறியாமையாகவோ
என் ரசனையின்மையாகவோ
என் கவனமின்மையாகவோ
என் தவறுதலாகவோ
ஒரு தர்ம சங்கடமான சம்பவமாகவோ
இன்னப் பிற
எதுவாகவும் இருக்கலாம்..

தப்புரைக்க சாத்தியமற்ற
காரணமாயினும்
தலை குனிவோடான
காயத்தை வழங்கிய அச்சிரிப்புக்கு
என்றைக்கும் தெரிய போவதில்லை
எச்சமாதானத்துக்கும் ஆறாத என் வலிகளை..

தலைப்பற்ற கவிதை - 1





ஊமையாய் இறுகிவிட்டிருந்தது
உன் வார்த்தையின் வலியக்கரங்கள்
என் உயிரின் குரல்வளையை நெரித்த
அத்தருணம்...

அது ஒரு மரணத்தைப் போல
தற்செயலான நேர்ச்சி அல்ல..

ஒரு படுகொலையை போல
திட்டமிடப்பட்ட நிகழ்வு..

என்றாலும்,
அதை நீ செய்திருக்க வேண்டாம்
உன் பூ உதடுகளால்..

வியாழன், 6 மே, 2010

மூன்று கவிதைகள்



முதல் கல்..

பைத்தியமென ஆடையணிவோரை ஒதுக்கும் நிர்வாணவுலகில்,
கோயில் சிலைகளின் துருத்திய அங்கங்களோடு
ஆண்கள் மத்தியில்
எந்நாணமுமற்று நடந்தார்கள் பெண்கள்..

எச்சிரமமுமின்றி மிகச் சாதாரணமாய்
யதார்த்தப் பார்வை பார்த்தார்கள் ஆண்கள்..

எல்லா ஆடையும் பூண்டிருந்த
என் மனதில் பொங்கிப் பெருகிய விரகம்
விழிகளைப் பெண்களில் அந்தரங்க அங்கங்களில் ஊர விட்டது..

நான் நிறம்மாறுவதை அறிந்த கூட்டம்
கல்லெடுத்து என்னைத் துரத்த,
தப்பிக்க ஓடி
தடுக்கி விழுந்தேன் கர்த்தனின் மடியில்..

விசாரித்த கர்த்தன் எறிந்தான் முதல் கல்..


-------------------



ஒரு சுடு சொல்


ஓணானென
எண்ணச்சுவரில்
ஒளிந்தும் தலைக்காட்டுவதுமாய் இருக்கிறது
ஒரு சுடு சொல்
தூக்கம் எரிந்து சாம்பலான இந்த இரவில்
அலையென
தரைக்கடலில் புரண்டு புரண்டு படுக்கும்
என் கைகளுக்கு
எக்கல்லும் அகப்படவில்லை அதைக் கொல்ல..

-----------------------------------------------------



நீ

கடவுளின் கைகள் அனுபிய
தூய ஆறுதலாய் நீ வந்தாய்

எனது புன்னகையும் மகிழ்ச்சியும்
உனதன்பின் பெருவெளியில்
நிம்மதியாய் உயிர் வளர்த்து திளைத்தன..

பூக்களாய் உனது கருனைகள்
உதிர்ந்த போதெல்லாம்
என் மனப்புல்வெளிகளில்
அவை பனித்துளிகளாய் நிறைந்தன..

வானம் தன்னை திறந்து
உச்சரித்த பரிசுத்த வார்த்தையின்
புனிதமாய் நீ இருந்தாய்..

கொடுக்கப்படுகிற யாவும்
எடுக்கப்படும் என்பதை நீ
உணர்த்திய தருணத்தில்..

வாழ்வின் எல்லா வீதியிலும்
பூத்துக் குலுங்க
நீ நட்ட மரங்கள் யாவும்
சிலுவைகளாய் மாறி இருந்தன...