
அந்த பாதை முழுக்க
சிந்திக் கிடந்த எழுத்துக்களை
அவள் உற்று நோக்கினாள்
பற்பலவாய் அவை நிறமித்துக் கொண்டிருந்தன
அருவெறுப்பும் சிநேகமும் ஈர்ப்பும்
அவற்றின்மேல் உண்டாயின அவளுக்கு
பரிமளத் தைலம் போலவும்
நிணத்தைப் போலவும்
மாறி மாறிக் கமழ்ந்தன
ஊதுவத்தியினதும்
சிகரெட்டினதும்
புகைந்தெரிந்து உதிர்ந்த சாம்பல்
அவ்வெழுத்துக்களின் அடியில் படிந்திருப்பதை
அவள் கவனித்தாள்
போகம் தத்துவம் சாபம்
அகோரம் மரிப்பு தவிப்பு
பிறப்பு ஆன்மீகமென
பலவற்றின் பிம்பங்களை பார்த்தவள்
தனக்கான பிம்பத்தை தேடிய போது
அகப்பட்டது அவளுக்கான புனிதமான ஆடையொன்று..
அதனை அவள் அணிந்த தருணத்தில் ஆனாள்
பூர்வ நிர்வாணமாய்..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக