என்றோ இருந்த பிரியத்தின் விழைவாய்
இன்று வாங்கி வந்தேன்
கண்ணாடி தொட்டியும்
இரு மீன்களும்..
இம்முனையும் அம்முனையும்
இருதலை கொள்ளியாய் அலையும்
மீன்கள் துழாவலாம்
கண்ணாடி தொட்டிக்குள் ஒரு ஆழியை..
பெருநீர் பரப்பும்
உப்பு சுவையும் அற்றதால்
மீன்களுக்கு பிடிக்காமல் போகலாம்
என் பிரியத்தையும்
இத்தொட்டியையும்..
இழந்த சமுத்திரத்துயரின் தனிமையின் நின்று
மீளும் முயற்சியில்
இரண்டும் புணர்ந்து உயிர்ப்பிக்கலாம் சில குஞ்சுகளை
நாளை அவை நம்பவும் கூடும்
கண்ணாடி தொட்டியே ஒரு கடலென..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக