Photobucket

வியாழன், 6 மே, 2010

மூன்று கவிதைகள்



முதல் கல்..

பைத்தியமென ஆடையணிவோரை ஒதுக்கும் நிர்வாணவுலகில்,
கோயில் சிலைகளின் துருத்திய அங்கங்களோடு
ஆண்கள் மத்தியில்
எந்நாணமுமற்று நடந்தார்கள் பெண்கள்..

எச்சிரமமுமின்றி மிகச் சாதாரணமாய்
யதார்த்தப் பார்வை பார்த்தார்கள் ஆண்கள்..

எல்லா ஆடையும் பூண்டிருந்த
என் மனதில் பொங்கிப் பெருகிய விரகம்
விழிகளைப் பெண்களில் அந்தரங்க அங்கங்களில் ஊர விட்டது..

நான் நிறம்மாறுவதை அறிந்த கூட்டம்
கல்லெடுத்து என்னைத் துரத்த,
தப்பிக்க ஓடி
தடுக்கி விழுந்தேன் கர்த்தனின் மடியில்..

விசாரித்த கர்த்தன் எறிந்தான் முதல் கல்..


-------------------



ஒரு சுடு சொல்


ஓணானென
எண்ணச்சுவரில்
ஒளிந்தும் தலைக்காட்டுவதுமாய் இருக்கிறது
ஒரு சுடு சொல்
தூக்கம் எரிந்து சாம்பலான இந்த இரவில்
அலையென
தரைக்கடலில் புரண்டு புரண்டு படுக்கும்
என் கைகளுக்கு
எக்கல்லும் அகப்படவில்லை அதைக் கொல்ல..

-----------------------------------------------------



நீ

கடவுளின் கைகள் அனுபிய
தூய ஆறுதலாய் நீ வந்தாய்

எனது புன்னகையும் மகிழ்ச்சியும்
உனதன்பின் பெருவெளியில்
நிம்மதியாய் உயிர் வளர்த்து திளைத்தன..

பூக்களாய் உனது கருனைகள்
உதிர்ந்த போதெல்லாம்
என் மனப்புல்வெளிகளில்
அவை பனித்துளிகளாய் நிறைந்தன..

வானம் தன்னை திறந்து
உச்சரித்த பரிசுத்த வார்த்தையின்
புனிதமாய் நீ இருந்தாய்..

கொடுக்கப்படுகிற யாவும்
எடுக்கப்படும் என்பதை நீ
உணர்த்திய தருணத்தில்..

வாழ்வின் எல்லா வீதியிலும்
பூத்துக் குலுங்க
நீ நட்ட மரங்கள் யாவும்
சிலுவைகளாய் மாறி இருந்தன...

2 கருத்துகள்:

க.பாலாசி சொன்னது…

முதல் கவிதை அருமையா இருக்குங்க... தொடருங்கள்.....

ஆதி சொன்னது…

நன்றி பாலாசி