Photobucket

திங்கள், 18 ஜூலை, 2011

நிர்வாணம்




















நிர்வாணத்தை மறைக்கிற
ஆடைகளிடம்
மறைக்க இயலாது
நிர்வாணத்தை....

ஆடைகள் நிர்வாணமானவை
நிர்வாணம் ஆடைபோன்றவை

நிர்வாணம் உன் இணை
உன் இணை உன் ஆடை

ஆடைகள் நிர்வாணத்தை மறைப்பதில்லை
அவை நிர்வாணத்தை தெரிந்து கொள்கின்றன
அல்லது நிர்வாணத்தோடு உறவு கொள்கின்றன
அல்லது நிர்வாணத்தோடு நிர்வாணமாய் ஆகிவிடுகின்றன


கடவுளின் கடவுள்
--------------------------

நிர்வாணம் என்பது
ஒரு பேருண்மையின் பேருண்மை
ஆகவே
ஓர் உயிர் உற்பத்திக்கு
இரு நிர்வாணங்கள் தேவைபடுகிறது..


தொலைந்த தூய்மை
----------------------------

நிர்வாணத்தை மறைக்கத் தெரியாதவரை
மனமும் நிர்வாணமாய் இருந்தது
நிர்வாணத்தை மறைக்கக் கற்றப்பின்
மனம் வக்கிரங்களால் நிரம்பிவிட்டது..


பொருள் பொய்த்தல்
--------------------------

நிர்வாணத்தை பற்றி பேசுகையில்
ஒருவன் அசூயை கொள்கிறான்
ஒருவன் வெட்கித் தலைசாய்கிறான்
ஒருவன் தான் பார்த்தக் காமப்படத்தின்
சரசக் காட்சியில் ஆழ்கிறான்
ஒருவன் மனப்பிறழ்வு கொண்ட ஒருத்தியின்
நெகிழ்ந்த உடைகளைப்பற்றி யோசிக்கிறான்
ஒருவன் விபத்தில் பிணமானவளின்
நிர்வாணத்தில் ஊருகிறான்...
ஒருவன் ரயில் பயணமொன்றில்
முட்புதர் நடுவில் மலங்கழித்துக் கொண்டிருந்த
ஒருத்தியைப் பற்றிச் சிந்திக்கிறான்
ஒருவன் தன் அந்தரங்கங்களின் பழைய ஞாபகங்களில் மூழ்குகிறான்
ஒருவன் சிகெரட்டென காமத்தில் புகைய ஆரம்பிக்கிறான்
ஒருவன் பேசுபவனை வக்கிரக்காரனெனப் பழிக்கிறான்

சுய மன விகாரம்
-------------------------

யாருக்கும் தம் நிர்வாணத்தைப் பற்றி
யோசிக்கும் அல்லது பேசும்
தைரியம் வந்துவிடுவதில்லை..
யாவரின் நிர்வாணமும்
மறைக்கப்பட வேண்டிய
படுபயங்கரமாதாகவே இருக்கிறது...

வியாழன், 3 மார்ச், 2011

என்னோடு நான்

















மனக்கரிச் சுவர்களில்
உன்னை வெள்ளையடித்தே
மீட்டுக்கொள்கிறேன்
என்னை..

கடந்து செல்லும் ஒவ்வொரு
காலத்துளியிலும்
உதிர்ந்து விழுகின்றன
வெவ்வேறு முகமூடிகள்..

வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
எவரோ எழுப்பிய வீட்டில்
யாரென்று தெரியாத என்னோடு..

புதன், 2 மார்ச், 2011

சங்கீதங்கள் - 2


















காதல்


கோடி தேவதைகள்
கூடி காக்கும்
தெய்வநரகத்தின் கருவில் இருந்து
உயிர்த்த புனித பாவம்..

யுகயுகங்களுக்கு முன்
ஊழிக்காலம் பிறப்பதற்கு
முந்தைய அந்திம பொழுதில்
ஆத்தீக சாத்தான்களின்
தெய்வீககரங்களால்
அருளப்பட்ட தேவசாபம்..

ஆதாமின் விழியிலிருந்து
ஏவாளின் மனதில் உதிர்ந்த
தூய வெறி
வெட்கப்பொறி

இறைவா!
அந்த வெறியை என்னிலும் விதை
உம் பரிசுத்த நாவினால்
தேவசாபத்தை எனக்கும் தருக
புனித பாவத்தில் மூழ்கி
புணர்ந்து உம்முடன் கலக்க
தெய்வநரகத்தின் விந்தை எனிலும்
சிந்துவீராக..

செவ்வாய், 1 மார்ச், 2011

சங்கீதங்கள் - 1


















பூக்களின் மகரந்த சேர்க்கை போல்
நிகழ்ந்தது நம் புணர்ச்சி..

இருளின் அடி பாதாளத்தில்
சரிந்த வெளிச்ச துகளாய்
தூவினாய் உன் அன்பை என்னில்..

மயக்க ரகசியங்களை
மறைக்கும் திரைச்சீலையை கிழித்து
உனை நோக்கிய
பயண திசையின்
பாதையை தெளிவித்தாய்..


ஐப்பொருள் கடந்த
மெய்ப்பொருளே
நீ ஈந்த அன்பையும் தெளிவையும்
யார்க்கும் கொடுக்க
அருள்க எனக்கு..

திங்கள், 28 பிப்ரவரி, 2011

தலைப்பற்ற கவிதை






















அவனின் தோட்டா
புணர்ச்சியிலீடுப்பட்டிருந்த
அந்த மிருகத்தின்
பிறப்புறுப்பில் பாய்ந்திட மரணக்குரலெழுப்பி
அது துடித்த தருணத்தில்
குரூர விழிகளோடு
வக்ர புன்னகை பூத்தவனின்
கனவுகளில் பாய்ந்து
அந்தரங்க உறுபுகளை குதறி
இரத்தம் நக்க
அலறி எழுந்தவன் எதிரே
பிளந்த வாய்களில் மரணம் வழிய
உயிர் பிதுங்கிய கண்களால்
அவனை பார்த்துக் கொண்டிருந்தது
விறைத்த மிருகத்தின் தலை....

வியாழன், 24 பிப்ரவரி, 2011

பாவங்களின் கூலி





















யாதொரு விழிகளையும் ஏமாற்றி
பாவமொன்றை புரிந்துவிட்டதாய்
இறுமாந்திருந்தேன்..

மன்னிப்பின் கைகளொன்றில்
அப்பாவத்திற்கான குறிப்பொன்றை
கண்டபோது
என் ரேகைகளும் தடயங்களும்
அடையாளம் அறியமுடியாதவை
எனும் இறுமாப்பு துகள்களானது..

 பாவத்தை உணர்ந்து
செப்பனிட முயற்சித்த தருணத்தில்
கடலில் வீசப்பட்ட கல்லாய்
நிகழ்த்தப்பட்ட இடத்தின் சுவட்டை
அது தொலைத்திருந்தது..

பிராயச்சித்தம் செய்ய இயலாத
இவ்வாறான பாவங்கள் பல
தீர்ப்பின் கரங்களால்
நமக்கு தினமும் கூலி
கொடுத்துக் கொண்டிருக்கின்றன..

வியாழன், 17 பிப்ரவரி, 2011

தலைப்பற்ற குறுங்கவிதை














போக போக குறுகும் இத்தெரு கோடியில்
பூட்டிக் கிடக்கிற வீட்டில்
வருஷங்களாய் அண்டியிருக்கும் அமைதியை /
வருஷங்களாய் தனிமையை புணர்ந்திருக்கும் அமைதியை
தனதாக்கிக் கொள்ள தாகிக்கிறது
நிச்சலனமற்ற மனம்..

புதன், 16 பிப்ரவரி, 2011

உன் வீடு












உன் வீட்டின் கதவை தட்டுகையில் எல்லாம்
யாரோ புதுப்புது மனிதர்கள் கதவை திறக்கிறார்கள்

உன் பெயரை சொல்லி
வினவுகையில் எல்லாம்
சலிப்போடு கூடிய தலையசைப்போடும்
எரிச்சலோடு கூடிய முகச்சுழிப்போடும்
உதட்டை பிதுக்குகிறார்கள்..

அவர்களுக்கு எல்லாம்
உன்னைப்பற்றிய விசாரிப்புக்கள்
இந்த வாழ்வில் படர்ந்திருக்கும் இருட்டை போலிருக்கிறது

எத்தனையோ பேர் குடிப்பெயர்ந்துவிட்டாலும்
உன் வீட்டில் வெற்று சூன்யமே படர்ந்திருக்கிறது
நீ பெயர்ந்த பிறகு..

திங்கள், 14 பிப்ரவரி, 2011

யாரையும் காதலிக்காததில் இருக்கும் சுதந்திரம்

photo

யாரையும் காதலிக்காமல் இருப்பதில்
இருக்கும் சுதந்திரம்
இருப்பதில்லை
யாரையும் காதலிப்பதில்

உனக்கு பிடித்தமானவருக்கெல்லாம்
பாடும் வாழ்த்தட்டை ஒன்றையும்
ஸாக்குலெட்ஸ் சிலவும்
பரிசு பொம்மைகளும் வாங்கித்தரலாம்
உன்னை பிடித்தவர்களிடமிருந்தும்
இவற்றை நீ எதிர்பார்க்கலாம்..


மீனுடனான தொட்டியொன்றை அளித்து
என்மேல் இவ்வாறே மேய்கின்றன
உன்கண்கள் எனலாம்

உன் செவ்விதழை மேலும் சிவப்பாக்கும்
இந்த லிப்ஸ்டிக் என்றாலும்
எனக்கு மிகப் பிரியமானது
உன் சாதார்ண இதழ்களே என கவிதை சொல்லலாம்

உனக்கு தோன்றும் போது விருப்பமான ஒருவரை
அழைத்து காற்று முழுக்க
அரட்டை நப்பு விரிய அலைபேசலாம்
டேட்டிங் என்று ரெஸ்டரண்ட் சென்று
ஐஸ்க்ரீம் உண்டு திரும்பி வரலாம்

இதழலைப்பாயும் நீள்முத்தத்தை,
நெருக்கமான தழுவலை
மோகப்பதம் மிதமாய் பரவும் பேச்சுக்களை
ஒன்றுகூடி ஒருமிக்கும் காமத்தை
யாதொரு தருணத்திலும்
யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம்..

என்றாலும்
உன்னால் இயல்வதில்லை
யாரையும் காதலிக்காமலிருக்க
தீர்மானமாய் வேண்டுகிறாய்
நிச்சயமாய் உன்னை காதலிக்கும் ஒருவரை..

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

ஒரு சமயத்தில்




ஒரு சமயத்தில்
உனக்கு நீ இருந்தாய்

ஒரு சமயத்தில்
உனக்கு அது இருந்தது

ஒரு சமயத்தில்
உனக்கு அவன் இருந்தான்

ஒரு சமயத்தில்
உனக்கு இவள் இருந்தாள்

ஒரு ச‌ம‌ய‌த்தில்
உன‌க்கு உன‌க்கு என்று
யாவும் இருந்த‌து

ஒரு ச‌ம‌ய‌த்தில்
உன‌க்கு உன‌க்கு என்று...
...................................
....................................
....................................
உனக்கு உனக்கு என்று
இல்லை ஒன்றும்
இல்லை இல்லையும்..

வியாழன், 10 பிப்ரவரி, 2011

எழுதிக் கொண்டிருந்தான் அவன்




















யோசனையின்
ஆழத்தில் இறங்கி
எதையோ அவன் தேடிக் கொண்டிருந்தான்

அத்தருணத்தில் வீரிட்டலறியது
என் அலைபேசி..

அமைதியான உறக்கத்திலிருந்து
எழுப்பப்பட்டவனை போலப்
பிரக்ஞை அறுபட
என்னை பார்த்தான் அவன்..

சின்ன குறுகுறுப்புமின்றி
அவ்வறையிலேயே நின்று
பேசத்துவங்கினேன் நான்
சத்தமாய்....

புதன், 9 பிப்ரவரி, 2011

தலைப்பற்ற கவிதை



என்னை பார்க்க வந்திருந்தாள் அம்மு
எப்பொழுதும் போன்ற மகிழ்ச்சியும்
குழந்தை போன்ற இனிமையும்
அவளின் குரல்களில் நேற்று இல்லை..

மிகவும் அயர்ச்சியாகவும்
கனத்தடர்ந்த துக்கங்கள் நிறைந்தவளாகவும்
பாறையொன்றை வெட்டி முகத்தில் ஒட்டிக் கொண்டவளை போலவும்
இறுக்கமானவளாக இருந்தாள்..

அப்பொழுது என் வீட்டின் பின்புறத்தில்
உள்ள ஆலமரத்தின்
ஒரு மருங்கில் கழுகொன்று அலறிக் கொண்டும்
மற்றொரு மருங்கில் குயிலொன்று கூவிக் கொண்டும்
இன்னொரு மருங்கில் காகமொன்று கரைந்து கொண்டுமிருந்தது

அருகே சுற்றுச் சுவர்கள் எழுப்பிய
புதர் மண்டிய வெற்று மனையில்
கருநிறப் பாம்பொன்று சுவரேற
முயற்சித்துக் கொண்டிருந்தது..

அவளை அழைத்து அவற்றை காண்பித்தேன்

நிச்சலனத்தில் நிரம்பினாள் அம்மு....

திங்கள், 24 ஜனவரி, 2011

தலைப்பற்ற கவிதை




அந்த பாதை முழுக்க
சிந்திக் கிடந்த எழுத்துக்களை
அவள் உற்று நோக்கினாள்

பற்பலவாய் அவை நிறமித்துக் கொண்டிருந்தன

அருவெறுப்பும் சிநேகமும் ஈர்ப்பும்
அவற்றின்மேல் உண்டாயின அவளுக்கு

பரிமளத் தைலம் போலவும்
நிணத்தைப் போலவும்
மாறி மாறிக் கமழ்ந்தன

ஊதுவத்தியினதும்
சிகரெட்டினதும்
புகைந்தெரிந்து உதிர்ந்த சாம்பல்
அவ்வெழுத்துக்களின் அடியில் படிந்திருப்பதை
அவள் கவனித்தாள்

போகம் தத்துவம் சாபம்
அகோரம் மரிப்பு தவிப்பு
பிறப்பு ஆன்மீகமென
பலவற்றின் பிம்பங்களை பார்த்தவள்
தனக்கான பிம்பத்தை தேடிய போது
அகப்பட்டது அவளுக்கான புனிதமான ஆடையொன்று..

அதனை அவள் அணிந்த தருணத்தில் ஆனாள்
பூர்வ நிர்வாணமாய்..

வியாழன், 20 ஜனவரி, 2011

தலைப்பற்ற குறுங்கவிதை




ஒன்றொன்றின் முடிவிலும்
தேவைப்படுகிறது ஒரு மூன்றாம் நாள்
அதிலிருந்து உயிர்த்தெழ.

ஒவ்வொரு உயிர்த்தெழுதலிலும்
தேவைப்படுகிறான் ஒரு புத்தன்
அதில் விழித்தெழ

செவ்வாய், 18 ஜனவரி, 2011

தலைப்பற்ற கவிதை




மறைந்து மறைந்து மறைந்து போனாய்
மிக மிக மிக அருகிலும்
மிக மிக மிக தொலைவிலும்

மிகைகளால் மீதங்களால் நிரம்பிக் கிடந்தாய்
மிகைகளால் மீதங்களால் நிரம்ப நிறைந்தாய்
நிறைந்தாய் நிறைந்தாய் நிறைந்தாய்
இரைந்தாய் இரைந்தாய் இரைந்தாய்
இரைந்து இரைந்து இரைந்து போன வழியில்
இரந்து இறந்து இரைந்திருந்தாய்

சுரந்தாய் கரந்தாய் கரைந்தாய்
கரைந்து கரைந்து உறைந்தாய்
உறைந்து உறைந்து கரைந்தாய்
உயர்வாய் மிதந்தாய்
மிதந்து மிதந்து மிகைந்தாய்
மிகைந்து மிகைந்து குறைந்தாய்
மறைந்தாய்
மறைந்து மறைந்து மறைந்து போனாய்
மிக மிக மிக அருகிலும்
மிக மிக மிக தொலைவிலும்

புதன், 3 நவம்பர், 2010

மெய்யறிதல்




வசைச் சொற்களால் ஏசலுற்ற தருணத்திலும்
கருந்துளையாய் சொற்களை உட்செமித்தவாறு
சூன்யமாய் இருந்தான் அவன்

பிறப்பித்தவர்களே
கனவு குழந்தைகளின் கழுத்தறுத்த சமயத்திலும்
சூழல் அப்படி செய்ய வற்புறுத்தியிருக்குமென்று
மற்றவர்களுக்கு சாதகமாய் வாதிட்டு
சமாதானம் செய்து கொண்டான் தன்னை

இடஞ்சுட்டாமல் அவன் மட்டுமே
பொருளுணரும்படியான குத்தல் பேச்சுக்களில்
ரத்தம் கசித்த போதினிலும்
சுமூகமாகவே ரணவாளிகளோடு உறவாடினான்

தன்னுடைய வெளியின் அளவை
மற்ற*வர்கள் முடிவு செய்ய முயற்சித்த தறுவாயிலும்
மிக நிதானமாகவே பேச்சுக்கள் நடத்தினான்

நீண்ட கரங்கள் கன்னத்தில் அறைந்த போதிலும்
குவிந்த உதடுகள் முகத்தில் உமிழ்ந்த போதிலும்
தாக்குறுதலின்
அவமானப்படலின்
வலியினது வீரியம் கனம் அடர்த்தி ஆழம் பற்றி
அமைதியாய் ஆய்வு செய்து குறிப்பெடுத்திருந்தான்

கவிதைக்கான அருந்தருணனொன்று
கலைக்கப்பட்ட போது
கடவுளின் முகமூடியை கழட்டி வீசி
பிடேட்டரின் கோர முகத்தோடு ஊளையிட்டலறி பாய்ந்து
பெரியவர் சிறியவர் பாராமல்
யாவரின் மனதையும் பிளந்து கிழித்த தருணத்தில்தான்
அவ*னது மெய்யான முகத்தின் விகாரத்தை
அவனே காண நேர்ந்தது

திங்கள், 1 நவம்பர், 2010

இது அவனைப் பற்றியக் கதையல்ல

முன் குறிப்பு : வணக்கம், இது என் முதல் கதை, கண்டிப்பாய் நிறைய நிறைய நிறைய நிறைய குறை இருக்கும், எடுத்துச் சொல்லுங்கள், கற்றுக் கொள்வேன். கதை நல்லா இல்லை என்றாலும், ஒரு வேளை இதை நீங்கள் கதையாகவே ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் தயக்கமில்லாமல் கண்டிப்பாய் சொல்லுங்கள்.


வெகுநாட்களாகவே கதை எழுதிவிட விருப்புற்றிருந்தாலும், கதை எழுதுதல் குறித்த பல கேள்விகள், இயலுமா எனும் ஐயம், நற்பல கதையாசிரியர்கள் இருக்குமிடத்தில் எழுதல் குறித்த தயக்கம், எழுத்துக்கு உடன்படாமல் இருக்கிற சூழல், வர மறுக்கிற வார்த்தைகள், வந்தாலும் உறவு முறித்துக் கொண்டு போகிற காதலியாய் கரு என முடியாமையின் எச்சங்கள் மிகைந்து பொதிந்து கிடந்த தறுவாயில்..

அவன் எனக்கு எந்த விதத்திலும் நெருக்கமானவனில்லை, அவன் எனக்கு எந்த விதத்திலும் தூரமானவனுமில்லை, அவனை நான் அறிந்திருக்கிறேன், அவனை நான் அறியாமலும் இருக்கிறேன், அவனை எனக்கு அவனாக தெரியும், அவனை எனக்கு அவனாகவும் தெரியாது, இப்பேர்ப்பட்ட குழப்பமான சூழலில் உங்களுக்கு எப்படி அவனை அறிமுகம் செய்யப் போகிறேன் என்று எனக்கு புரியவில்லை.

இந்த இரவில் அவனைப் பற்றி கதை சொல்லவேண்டும் என்று ஏன் எனக்கு தோன்றியதென்று அறிகிலேன், எனினும் அவனைப் பற்றி சொல்லவே எனக்கு விருப்பமாய் இருக்கிறது, தற்போது தான் சென்னையில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன், கோயம்பேட்டில் பேருந்தில் ஏறி எனக்கான முன்பதிவு செய்துவிட்ட ஜன்னலோர இருக்கையில் அமர்ந்துவிட்டேன்.

அவனைப் பற்றி நினைத்தாலே அவனின் பல பெயர்களும் நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலாது, மொன்னை பிளேடு, ரம்பம், செடி, அறுவை, தோல்வாயன், தொன தொன கிழவி இத்யாதி, இத்யாதி. இவ்வளவு பெயர்கள் இருந்தாலும் அவன் அதனை பொருட்டாக எடுத்துக் கொண்டதுமில்லை, அதை பற்றி கவலையுற்று தன்னை மாற்றிக் கொள்ளவும் எண்ணியதில்லை. பெரும்பாலும் அவன் பேச்சுக்கள் ஒரு நிலைப்பட்டதாய் இருக்காது, அது சம்பந்தம் சம்பந்தமில்லாத களங்களுக்கு மாறிக் கொண்டே இருக்கும், சம்பந்தமே இல்லாத சில விடயங்களையும் சம்பந்தம் செய்யும், அப்பேர்ப்பட்ட தருணங்களில் அவனைக் கண்டு நான் வியக்காமல் இருந்ததில்லை, என்றாலும் அவன் பேச்சுக்கள் உண்டாக்குகிற அயர்ச்சி எரிச்சலோடு முகம் சுழிக்கவும் வைக்கும், நானே அவனிடம் அப்படி நடந்து கொண்டும் இருக்கிறேன்.


பேருந்து இன்னும் புறப்படவில்லை, மனதை இழுத்து செல்கிற அழகிய பெண்களைப் போல, எதிர்பாராமல் சந்திக்கிற இனிமையான மனிதர்களைப் போல, சுவையான சம்பவங்களைப் போல, மகிழ்ச்சியான தருணங்களைப் போல, மேகங்கள் வானத்தில் கூடி கூடி கலைந்து கொண்டிருக்கின்றன. இதற்கு முன் இந்த மேகங்களை நான் பார்த்திருக்கிறேனா ? இவை புதிய மேகங்களா ? அல்லது பழயவைகள் தானா ? என் அருகிருக்கையில் அமர்ந்திருப்பவனை போலத் தான் இந்த மேகங்களுமா, இங்கிருந்து புறப்பட்ட உடன் இதனுடனான என் தொடர்பு அறுந்துவிடுமா ?

ஓவியங்களில் அவனுக்கு மிகைந்த ஈடுபாடு உண்டு, அதுமட்டுமல்ல கைவினைப் பொருட்களும் மிக அழகழகாக செய்வான். வீட்டில் அவன் அறையின் நான்கு சுவர்களிலும் நான்குவித வண்ணப்பூச்சுக்கள் அடித்து வைத்திருக்கிறான், வித்யாச வித்யாசமான வண்ண விளக்குகள், மணி போன்ற சின்ன சின்ன விளக்குகள், இயற்கை காட்சி போன்ற நவீன ஓவியங்கள் என்று அந்த சுவர்களை மெருகேற்றியும் வைத்திருக்கிறான். அவன் வீட்டுக்கு சென்று வருகிறவர்கள், அதுவரை பழக்கமாகாத அவனைப் பார்ப்பார்கள், ஒரு கண்காட்சிக்கு வந்திருப்பதைப் போன்று உணர்வார்கள். அவனை காண அவன் வீட்டுக்கு ஒரு முறை சென்றிருந்தேன், வெளியே எங்கோ போயிருப்பதாய் சொன்னார் அவன் அப்பா..

அவனுக்காக அவன் வீட்டில் காத்திருந்தேன், சற்றைக்கு மிகைந்த நேரம் கழித்தே வந்தான், என்னை கண்டும், எதுவும் பேசுமால் வீட்டின் பின்புறமாய் சென்றான்

“அந்த தம்பி ரொம்ப நேரமா உனக்காக காத்திட்டு இருக்கு, நீ எங்க போய் சுத்திட்டு வர”

என்ற அவன் அம்மாவின் குரலையும் பொருட்படுத்தவே இல்லை..

என்ன மனுசன் டா இவன் ? இவன பார்க்கத்தானே வந்திருக்கோம், கண்டுக்காம கூட போறான் என்று அவமானமாக இருந்தது. அதற்கு மேல் அவன் வீட்டில் அமர்ந்திருக்க தன்மானம் தடுத்தது, கடுப்பாக இருந்தது, அப்படியே சொல்லாமல் கிளம்பி விடலாம் என்று தோன்றியது.

“சொல்லாமல் கிளம்பினால் அவன் வீட்டார் என்னைப் பற்றித்தான் என்ன நினைப்பார்கள் ?”

அவன் கண்டு கொள்ளவில்லை என்றாலும் அவன் வீட்டார்கள் நல்லவிதமாய் தானே என்னிடம் நடுந்து கொண்டார்கள், உபசரித்தார்கள், அப்படி இருக்க அவர்களிடம் கூறாமல் செல்வது சரியாக இருக்குமா ?

அவன் அம்மாவை அழைத்து “ நான் கிளம்புறேன் மா” என்றேன்

அவர்களுக்கு என் மனநிலை புரிந்திருக்க வேண்டும்

“ஒரு நிமிஷம் இருப்பா, அவன போய் கூட்டியாறேன்” என்று சங்கடமான முகத்தோடு சொன்னார்கள்

“நீங்க இருங்க மா, நானே போய் அவன பார்த்து சொல்லிட்டு கிளம்புறேன்”

அவர்கள் பதில் சொல்லும் முன் வீட்டின் பின்புறம் நோக்கி நடந்தேன்

வீட்டுக்கு வரும் பொழுது கொண்டு வந்திருந்த கான்கிரிட் கட்டும் கம்பியை, கொல்லையில் இருந்த மாமரத்தில் வயிறு தட்டையான “S” போன்ற வடிவத்தில் வளைத்துக் கொண்டிருந்தான்.

“நான் கிளம்புறேன் டா”

“இரு டா, உனக்கொன்னு செய்து காட்டலாம் தான் இந்த கம்பியை வளச்சிட்டு இருக்கேன்” என விழிகளில் பெருமை பொங்க சிரித்தான்

வீட்டுக்கு வந்தவனை வா னு கூட கூப்பிடாம வந்துட்டு, எனக்கு செய்து காட்டுறேன் னு சொல்றியே “ லூசா டா நீ” என்று கேட்க தோன்றியது

ஆனால் கேட்கவில்லை.

திரும்பி பார்த்த போது என் இடது புற வரிசையில் ஜன்னலுக்கடுத்த இருக்கயில் அமர்ந்திருந்த பெண் குலுங்கிக் குலுங்கி அழுதவாறு அலைபேசியில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தாள். பொத்தல் விழுந்த ஓடாக அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடி கொண்டிருந்தது. ஒரு விடை பெறுதலுக்கான பேச்சாகத்தான் அது இருக்க வேண்டும், பிரிவுத் துயரில் தான் அவள் அழுது கொண்டிருக்கிறாள் என்று மனது பேசியது. தலை நிறைய அவள் சூடியிருக்கும் பூக்களில் இப்போது எந்த நறுமணம் வீசும் ? ஆற்றாமையின் நறுமணமா ? அழுகையின் நறுமணமா ? அவளின் நறுமணமா ? இல்லை பூவின் நறுமணமா ?

வேரோடு அறுந்துவிடுகிற பிரிவோ ? அல்லது தற்காலிகமான பிரிவோ ? அதை சொல்லுதல் என்பது அவ்வளவு சுலபமானதல்ல, வார்த்தைகள் நனைய வழிகிற கண்ணீரில் அந்த பிரிவின் கனம் குறைந்துவிடுவதில்லை. ஒரு அழுத்தத்தை என்றுமே அது நம்முள் இருத்துகிறது, அதன் அடர்த்தி அதிகமாகும் போதெல்லம் யானையின் கால்களை கொண்டு அது நம்மை நசுக்குகிறது. அடர்த்தி குறையும் போது எறும்பின் கால்களை போல சுருங்கி மனசின் பரப்பெங்கும் ஊர்ந்து கொண்டே இருக்கிறது.

வளைத்த கம்பியை வைத்து அவன் ஒரு டைனோஸர் செய்தான், மிகத்துல்லியமாக இல்லை என்றாலும் அது டைனோஸர் போலவே இருந்தது.

“இந்த ஓவியங்களை எதை பார்த்து வரைஞ்ச டா” என்று அவன் சுவரில் இருக்கும் ஓவியங்கள் குறித்து கேட்டேன்

“இதுவா வான்காவுடையது, இணையத்தில் பார்த்தேன், பிரிண்ட் எடுத்துட்டு வந்து வரைஞ்சேன், உனக்கு வான்கா பற்றி தெரியுமா ? “

உதட்டைப் பிதுக்கினேன்

“அவரு ஒரு போஸ்ட் இம்ப்ரஷனிஸ்ட், அவரோட ஓவியங்கள் எல்லாம் வயல் வெளி காட்சிகள் நிறைந்ததாகவே இருக்கும், வாழும் போது அவரை யாரும் கண்டுக்க கூட இல்ல, கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஓவியங்கள் வரை வரைஞ்சுருக்கார், ஆனால் அதில் இரண்டே இரண்டுதான் அவர் வாழும் போது விற்ற, அதுவும் சொற்ப விலைக்கு, இப்ப அவர் கையால் வரையப்பட்ட ஓவியங்கள் 2 கோடி வரை விற்கப்படுது, கடைசி வரை அவர் கல்யாணமே பண்ணிக்கல” என்று ஒரு குறுஞ்சரித்திரத்தையே சொன்னான்

“எங்க இருந்து டா இவ்வளவு விஷயங்கள சேகரிக்கிற”

“இணையத்தில் இருந்துதான்” என்று பெருமையோடு என் வியப்பை கண்டு புன்னகைத்தான்

“டா வின் சியோட, மோனோலிஸா ஓவியம் பற்றிய ரகசியம் என்ன னு தெரியுமா டா”

நான் கேட்டதும் அவனின் கருத்த முகம் மேலும் இருண்டது, அவனுக்கு அபிராமி குறித்த நினைவுகள் வந்திருக்க வேண்டும், அபிராமியும் இவனை உண்மையாகவே காதலித்தாள், ஆனால் இவனின் சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகள் அவளுக்கு இவன் மீதாக பயத்தை உண்டு பண்ணிவிட்டது. அவள் இவனைப் பிரிந்ததின் சரியான விவரம் எனக்கு தெரியாதென்றாலும், அவள் இவனை விட்டு முற்றுமாக விலகி சென்றுவிட்டாள் என்பது எனக்கு நிச்சயமாய் தெரியும்.

அவனை அப்படிப் பார்க்க எனக்கு பரிதாபமாக இருந்தது, அவன் கவனத்தை திசை திருப்ப..

“ஜிம்மி எங்க டா காணோம்” என்றேன்

“ஜிம்மியா இரு சொல்றேன்” என்று சொல்லிவிட்டு, டைனோஸரின் முன்னங்கால்களிலும், பின்னங்கால்களிலும் நுண்மையாய் வெட்டிய கம்பிகளை நகங்களாக செருகிக் கொண்டிருந்தான்.

பிறகென்னை கொல்லைப்புறம் அழைத்து சென்றான், “ இந்த கொய்யா செடியை பார்த்தியா, பெரிசா வந்திருக்கு இல்ல”

“ம்” இதை எதற்கு என்னிடம் காட்டுகிறான் என்று யோசித்துக் கொண்டிருந்த போதே

“இந்த செடி ரொம்ப நாளா வளராமலே இருந்துச்சு, ஏதாவது உரம் வச்சா வளரும்னு, ஜிம்மிய கொன்னு இதுக்கு உரமா புதைச்சுட்டேன்”

அதிர்ச்சியில் ஸ்தம்பித்து போன்னேன் நான், அவனைப் பார்க்கவே எனக்கு பயமாக இருந்தது, அவன் எந்த சலனமும் இல்லாமல் சாதாரணமாய் நின்றிருந்தான். அவன் முகத்தில் பெருமை பொங்கும் புன்னகை வழிந்து கொண்டிருந்தது..

பசங்க சொல்வது போல் இவனுக்கு மனப்பிறழ்வு தான் ஏற்பட்டிருக்கிறது..

எனக்கு அதற்கு மேல் அவன் வீட்டில் இருக்க தைரியமில்லை, அவன் பதிலைக் கூட கேட்காமல் "கிளம்புறேன் டா" என்று சொல்லி வெளியேறிவிட்டேன்

குழந்தை போல் வளர்த்த பிராணியை கொல்ல மனம் வருமா ? எப்போதாவது இவன் வீட்டுக்கு வரும் என்னையே வாலாட்டி, துள்ளி இப்பக்கமும், அப்பக்கமும் ஒரு குழந்தை போல ஓடி சந்தோஷமாய் வரவேற்குமே அந்த அன்பான ஜீவனையா இவன் கொன்றுவிட்டான். அபிராமி இவனைப் பார்த்து மிரட்சியுற்றத்தின் அர்த்தம் கொஞ்சம் விளங்க ஆரம்பித்தது.

அவனை ஒரு சரியான மனநல மருத்துவருக்கு கூட்டி செல்ல வேண்டும் என்று தோன்றியது, ஆனாலும் அவன் மீது உண்டான வெறுப்பும், பயமும் என்னை அவனை விட்டு விலகவே செய்தது. அதற்கப்புறம் அவனிடம் இருந்து வரும் மின்னஞ்சல்களைக் கூட படிக்காமல் டெலிட் செய்ய ஆரம்பித்தேன்

அழுது கொண்டிருந்த பெண்ணை பார்த்தேன், அவள் தற்போது மகிழ்ச்சி பொங்கும் குரலில் பேசிக் கொண்டிருந்தாள், தன் துயரத்தில் இருந்து வெளி வந்து சமாதானமாகி இருக்க வேண்டும் என்று தோன்ற, அவளுக்கடுத்து ஜன்னலுக்கு அருகே அமர்ந்திருந்த பெண்ணும் யாரோடோ அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள்.

சாலையில் வாகனங்கள் விரைவாக சென்று கொண்டிருந்தன, இதில் பெரும்பாலானவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருக்க வேண்டும், கனரகவாகனங்களின் விளக்கு வெளிச்சங்கள் கண்களைக் கூச வைத்தன, என் அருகே அமர்ந்திருந்தவன் உறங்கிக் கொண்டிருந்தான்.

எனக்கான கதையை ஏந்தி வந்தவன் மனதில் நடமாடிக் கொண்டிருந்தான்.

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

காக்கைகளின் கால்களைப் போல முகங்களும்..




நமக்கு பரிட்சயமான இடங்களில் அலையும் காக்கைகள்
மனிதனின் கால்கள் உற்றிருப்பவை

ஓட்டுக்கூறையில்.. குளியலறை சுவற்றில்.. கரைந்திரந்து
கூட்டத்தொடு பகிர்ந்துண்ணுல் அறியாத
சுயநலமானவை..

மிக உயர்ந்து பறக்கும் சிறகுகளுற
சகக்காக்கையை பருந்துக்கு கூலித்தரும்
அரக்க மனமுண்டவை..

தன் வடையைக்காத்துக்கொள்ள
நரிகளிடத்து
பிறர் வடையை காட்டிக்கொடுக்கும் வஞ்சமுள்ள‌வை..

யாரோ கல்லிட்டு நிறைத்த ஜாடியை ஆக்ரமித்து
நீரையும், ஜாடியையும் தனதென்று சொந்தமுரைக்கும்
தயக்கமற்ற பொய்ச்சொல்லுடையவை..

தமை மிரட்டும் கூகைகளுக்கு
காவல் நாயாக ஒப்பந்தித்துக் கொண்டு
இனங்காக்கும் காக்கைகளை
தூரோக‌த்தால் வேட்டையாடும் சூழ்ச்சியான‌வை..

சில பனம்பழங்களை சிதைக்கவே
மேலழுந்த அமர்ந்து விழுப்பிப்பவை..

நமக்கு பரிட்சயமான இந்த காக்கைகளுக்கு
கால்களைப் போன்று
முகங்களும்
மனிதனுடையவை..

வெள்ளி, 16 ஜூலை, 2010

உயிர்




ஒருமுறை சொர்க்கத்தில் சேர்க்கிறாய் - பின்
ஒருமுறை நரகத்தில் வார்க்கிறாய்
ஒருமுறை முளைக்கட்ட விதைக்கிறாய் - அடி
ஒருமுறை முளையறுத்து மிதிக்கிறாய்
ஒருமுறை உன்னைத்தான் பார்ப்பதற்கு - நீ
உயிரையே வாடகைக் கேட்கிறாய்
ஒருநொடி நாந்தான் மகிழ்ந்ததால் - என்
உணர்ச்சிக்கு தடைப்பல விதிக்கிறாய்

எதுவரையில் என்பயணம் அறியவில்லை - அதை
என்றைக்கும் அறிந்துவிட முயன்றதில்லை
இதுவரையில் என்வேர்கள் அசைந்ததில்லை - அடி
இளவெட்டு தூறல்களில் நனைந்ததில்லை
பொதுவாக கனவுகளில் மிதந்ததில்லை - உயிர்
புன்னகையோ இமைகளில் வழிந்ததில்லை
மெதுவாக என்னைநீ மாற்றிவிட்டாய் - என்
மேகத்தில் மழையீரம் பூசிவிட்டாய்

திறக்காத விழிகளை திறந்துவிட்டாய் - ஒரு
திருவோடாய் இதயத்தை ஏந்தவிட்டாய்
மரக்காதில் வார்த்தைகளை எதிரொலித்தாய் - உன்
மடிமீது எந்தலையை மலரவிட்டாய்
அடங்காத ஆசைகளில் அடுப்பெரித்தாய் - நான்
அழுகின்ற நீர்மங்களில் நெய்யெடுத்தாய்
இடக்காக வார்த்தைகளை இதழ்நிறைத்தாய் - என்
இதயத்தைக் குறிவைத்து எதிலடித்தாய்

இளகாதப் பாறையென எண்ணி நிமிர்ந்தேன் - உன்
இமைக்காற்றில் பொடிப்பொடியாய் இடிந்து தகர்ந்தேன்
பழகாது பெண்களிடம் தள்ளி இருந்தேன் - உன்னை
பார்த்ததுமே பழகிவிட ஆர்வம் அணிந்தேன்
கிழடான காதல்கதைக் கேட்டுச் சிரித்தேன் - விழி
கிளர்ச்சியிலே உயிரோடு கிழிந்து உதிர்ந்தேன்
மலடான மேகமென மயங்கி நகர்ந்தேன் - ஒரு
மலர்நினைவில் மழைப்பெய்ய கண்கள் இருண்டேன்

விடியாத இரவுவந்தால் பகல்கள் உண்டா ? - உன்
வீண்பிடி வாதத்தில் எந்தப் பயனுமுண்டா ?
முடியாது எனச்சொல்லி முகத்தை மறைத்தாய் - என்
மூச்சுக்கு கட்டாயத் தூக்கு கொடுத்தாய்
அடிக்காதல் வேறுசெயதால் இனிமேல் மீண்டும் - உயிர்
ஆன்மா இன்னொன்று புதிதாய் வேண்டும் - என்னைப்
பிடிக்காத ஒருத்திக்காய் சாக ஒன்று - என்மேல்
பிரியமான ஒருத்திக்காய் வாழ மற்றொன்று.

வியாழன், 15 ஜூலை, 2010

தலைப்பற்ற கவிதை - 6




கானல் நீர் ஊறும் வெளியில்
இளைப்பார நிழல் தேடி
தன் நிழலை கண்டமர்ந்து
ஏமாந்து ஏமாந்து பறக்கிறது
வண்ணத்துப் பூச்சி காற்றின் வழியில்..

பொங்கி பொசுக்கும் வெயிலில்
மங்கும் சிறகுகளின் நிறங்களையும்
பொருட்படுத்தாது
நீள்கிறது அதன் தேடல்..

விரிந்திருக்கும் மணலின் வெஞ்சூட்டில்
நொடிந்து இரத்தம் சுண்டி சாகுமிடத்தில்
என்றைக்காவது முளைத்து கிளைக்கலாம் ஒரு மரம்
வண்ணத்துப் பூச்சியின் தேடலெதையும் அறியாமல்..