Photobucket
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 18 ஜூலை, 2011

நிர்வாணம்




















நிர்வாணத்தை மறைக்கிற
ஆடைகளிடம்
மறைக்க இயலாது
நிர்வாணத்தை....

ஆடைகள் நிர்வாணமானவை
நிர்வாணம் ஆடைபோன்றவை

நிர்வாணம் உன் இணை
உன் இணை உன் ஆடை

ஆடைகள் நிர்வாணத்தை மறைப்பதில்லை
அவை நிர்வாணத்தை தெரிந்து கொள்கின்றன
அல்லது நிர்வாணத்தோடு உறவு கொள்கின்றன
அல்லது நிர்வாணத்தோடு நிர்வாணமாய் ஆகிவிடுகின்றன


கடவுளின் கடவுள்
--------------------------

நிர்வாணம் என்பது
ஒரு பேருண்மையின் பேருண்மை
ஆகவே
ஓர் உயிர் உற்பத்திக்கு
இரு நிர்வாணங்கள் தேவைபடுகிறது..


தொலைந்த தூய்மை
----------------------------

நிர்வாணத்தை மறைக்கத் தெரியாதவரை
மனமும் நிர்வாணமாய் இருந்தது
நிர்வாணத்தை மறைக்கக் கற்றப்பின்
மனம் வக்கிரங்களால் நிரம்பிவிட்டது..


பொருள் பொய்த்தல்
--------------------------

நிர்வாணத்தை பற்றி பேசுகையில்
ஒருவன் அசூயை கொள்கிறான்
ஒருவன் வெட்கித் தலைசாய்கிறான்
ஒருவன் தான் பார்த்தக் காமப்படத்தின்
சரசக் காட்சியில் ஆழ்கிறான்
ஒருவன் மனப்பிறழ்வு கொண்ட ஒருத்தியின்
நெகிழ்ந்த உடைகளைப்பற்றி யோசிக்கிறான்
ஒருவன் விபத்தில் பிணமானவளின்
நிர்வாணத்தில் ஊருகிறான்...
ஒருவன் ரயில் பயணமொன்றில்
முட்புதர் நடுவில் மலங்கழித்துக் கொண்டிருந்த
ஒருத்தியைப் பற்றிச் சிந்திக்கிறான்
ஒருவன் தன் அந்தரங்கங்களின் பழைய ஞாபகங்களில் மூழ்குகிறான்
ஒருவன் சிகெரட்டென காமத்தில் புகைய ஆரம்பிக்கிறான்
ஒருவன் பேசுபவனை வக்கிரக்காரனெனப் பழிக்கிறான்

சுய மன விகாரம்
-------------------------

யாருக்கும் தம் நிர்வாணத்தைப் பற்றி
யோசிக்கும் அல்லது பேசும்
தைரியம் வந்துவிடுவதில்லை..
யாவரின் நிர்வாணமும்
மறைக்கப்பட வேண்டிய
படுபயங்கரமாதாகவே இருக்கிறது...

வியாழன், 3 மார்ச், 2011

என்னோடு நான்

















மனக்கரிச் சுவர்களில்
உன்னை வெள்ளையடித்தே
மீட்டுக்கொள்கிறேன்
என்னை..

கடந்து செல்லும் ஒவ்வொரு
காலத்துளியிலும்
உதிர்ந்து விழுகின்றன
வெவ்வேறு முகமூடிகள்..

வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
எவரோ எழுப்பிய வீட்டில்
யாரென்று தெரியாத என்னோடு..

வியாழன், 24 பிப்ரவரி, 2011

பாவங்களின் கூலி





















யாதொரு விழிகளையும் ஏமாற்றி
பாவமொன்றை புரிந்துவிட்டதாய்
இறுமாந்திருந்தேன்..

மன்னிப்பின் கைகளொன்றில்
அப்பாவத்திற்கான குறிப்பொன்றை
கண்டபோது
என் ரேகைகளும் தடயங்களும்
அடையாளம் அறியமுடியாதவை
எனும் இறுமாப்பு துகள்களானது..

 பாவத்தை உணர்ந்து
செப்பனிட முயற்சித்த தருணத்தில்
கடலில் வீசப்பட்ட கல்லாய்
நிகழ்த்தப்பட்ட இடத்தின் சுவட்டை
அது தொலைத்திருந்தது..

பிராயச்சித்தம் செய்ய இயலாத
இவ்வாறான பாவங்கள் பல
தீர்ப்பின் கரங்களால்
நமக்கு தினமும் கூலி
கொடுத்துக் கொண்டிருக்கின்றன..

புதன், 16 பிப்ரவரி, 2011

உன் வீடு












உன் வீட்டின் கதவை தட்டுகையில் எல்லாம்
யாரோ புதுப்புது மனிதர்கள் கதவை திறக்கிறார்கள்

உன் பெயரை சொல்லி
வினவுகையில் எல்லாம்
சலிப்போடு கூடிய தலையசைப்போடும்
எரிச்சலோடு கூடிய முகச்சுழிப்போடும்
உதட்டை பிதுக்குகிறார்கள்..

அவர்களுக்கு எல்லாம்
உன்னைப்பற்றிய விசாரிப்புக்கள்
இந்த வாழ்வில் படர்ந்திருக்கும் இருட்டை போலிருக்கிறது

எத்தனையோ பேர் குடிப்பெயர்ந்துவிட்டாலும்
உன் வீட்டில் வெற்று சூன்யமே படர்ந்திருக்கிறது
நீ பெயர்ந்த பிறகு..

திங்கள், 14 பிப்ரவரி, 2011

யாரையும் காதலிக்காததில் இருக்கும் சுதந்திரம்

photo

யாரையும் காதலிக்காமல் இருப்பதில்
இருக்கும் சுதந்திரம்
இருப்பதில்லை
யாரையும் காதலிப்பதில்

உனக்கு பிடித்தமானவருக்கெல்லாம்
பாடும் வாழ்த்தட்டை ஒன்றையும்
ஸாக்குலெட்ஸ் சிலவும்
பரிசு பொம்மைகளும் வாங்கித்தரலாம்
உன்னை பிடித்தவர்களிடமிருந்தும்
இவற்றை நீ எதிர்பார்க்கலாம்..


மீனுடனான தொட்டியொன்றை அளித்து
என்மேல் இவ்வாறே மேய்கின்றன
உன்கண்கள் எனலாம்

உன் செவ்விதழை மேலும் சிவப்பாக்கும்
இந்த லிப்ஸ்டிக் என்றாலும்
எனக்கு மிகப் பிரியமானது
உன் சாதார்ண இதழ்களே என கவிதை சொல்லலாம்

உனக்கு தோன்றும் போது விருப்பமான ஒருவரை
அழைத்து காற்று முழுக்க
அரட்டை நப்பு விரிய அலைபேசலாம்
டேட்டிங் என்று ரெஸ்டரண்ட் சென்று
ஐஸ்க்ரீம் உண்டு திரும்பி வரலாம்

இதழலைப்பாயும் நீள்முத்தத்தை,
நெருக்கமான தழுவலை
மோகப்பதம் மிதமாய் பரவும் பேச்சுக்களை
ஒன்றுகூடி ஒருமிக்கும் காமத்தை
யாதொரு தருணத்திலும்
யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம்..

என்றாலும்
உன்னால் இயல்வதில்லை
யாரையும் காதலிக்காமலிருக்க
தீர்மானமாய் வேண்டுகிறாய்
நிச்சயமாய் உன்னை காதலிக்கும் ஒருவரை..

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

ஒரு சமயத்தில்




ஒரு சமயத்தில்
உனக்கு நீ இருந்தாய்

ஒரு சமயத்தில்
உனக்கு அது இருந்தது

ஒரு சமயத்தில்
உனக்கு அவன் இருந்தான்

ஒரு சமயத்தில்
உனக்கு இவள் இருந்தாள்

ஒரு ச‌ம‌ய‌த்தில்
உன‌க்கு உன‌க்கு என்று
யாவும் இருந்த‌து

ஒரு ச‌ம‌ய‌த்தில்
உன‌க்கு உன‌க்கு என்று...
...................................
....................................
....................................
உனக்கு உனக்கு என்று
இல்லை ஒன்றும்
இல்லை இல்லையும்..

வியாழன், 10 பிப்ரவரி, 2011

எழுதிக் கொண்டிருந்தான் அவன்




















யோசனையின்
ஆழத்தில் இறங்கி
எதையோ அவன் தேடிக் கொண்டிருந்தான்

அத்தருணத்தில் வீரிட்டலறியது
என் அலைபேசி..

அமைதியான உறக்கத்திலிருந்து
எழுப்பப்பட்டவனை போலப்
பிரக்ஞை அறுபட
என்னை பார்த்தான் அவன்..

சின்ன குறுகுறுப்புமின்றி
அவ்வறையிலேயே நின்று
பேசத்துவங்கினேன் நான்
சத்தமாய்....

புதன், 3 நவம்பர், 2010

மெய்யறிதல்




வசைச் சொற்களால் ஏசலுற்ற தருணத்திலும்
கருந்துளையாய் சொற்களை உட்செமித்தவாறு
சூன்யமாய் இருந்தான் அவன்

பிறப்பித்தவர்களே
கனவு குழந்தைகளின் கழுத்தறுத்த சமயத்திலும்
சூழல் அப்படி செய்ய வற்புறுத்தியிருக்குமென்று
மற்றவர்களுக்கு சாதகமாய் வாதிட்டு
சமாதானம் செய்து கொண்டான் தன்னை

இடஞ்சுட்டாமல் அவன் மட்டுமே
பொருளுணரும்படியான குத்தல் பேச்சுக்களில்
ரத்தம் கசித்த போதினிலும்
சுமூகமாகவே ரணவாளிகளோடு உறவாடினான்

தன்னுடைய வெளியின் அளவை
மற்ற*வர்கள் முடிவு செய்ய முயற்சித்த தறுவாயிலும்
மிக நிதானமாகவே பேச்சுக்கள் நடத்தினான்

நீண்ட கரங்கள் கன்னத்தில் அறைந்த போதிலும்
குவிந்த உதடுகள் முகத்தில் உமிழ்ந்த போதிலும்
தாக்குறுதலின்
அவமானப்படலின்
வலியினது வீரியம் கனம் அடர்த்தி ஆழம் பற்றி
அமைதியாய் ஆய்வு செய்து குறிப்பெடுத்திருந்தான்

கவிதைக்கான அருந்தருணனொன்று
கலைக்கப்பட்ட போது
கடவுளின் முகமூடியை கழட்டி வீசி
பிடேட்டரின் கோர முகத்தோடு ஊளையிட்டலறி பாய்ந்து
பெரியவர் சிறியவர் பாராமல்
யாவரின் மனதையும் பிளந்து கிழித்த தருணத்தில்தான்
அவ*னது மெய்யான முகத்தின் விகாரத்தை
அவனே காண நேர்ந்தது

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

காக்கைகளின் கால்களைப் போல முகங்களும்..




நமக்கு பரிட்சயமான இடங்களில் அலையும் காக்கைகள்
மனிதனின் கால்கள் உற்றிருப்பவை

ஓட்டுக்கூறையில்.. குளியலறை சுவற்றில்.. கரைந்திரந்து
கூட்டத்தொடு பகிர்ந்துண்ணுல் அறியாத
சுயநலமானவை..

மிக உயர்ந்து பறக்கும் சிறகுகளுற
சகக்காக்கையை பருந்துக்கு கூலித்தரும்
அரக்க மனமுண்டவை..

தன் வடையைக்காத்துக்கொள்ள
நரிகளிடத்து
பிறர் வடையை காட்டிக்கொடுக்கும் வஞ்சமுள்ள‌வை..

யாரோ கல்லிட்டு நிறைத்த ஜாடியை ஆக்ரமித்து
நீரையும், ஜாடியையும் தனதென்று சொந்தமுரைக்கும்
தயக்கமற்ற பொய்ச்சொல்லுடையவை..

தமை மிரட்டும் கூகைகளுக்கு
காவல் நாயாக ஒப்பந்தித்துக் கொண்டு
இனங்காக்கும் காக்கைகளை
தூரோக‌த்தால் வேட்டையாடும் சூழ்ச்சியான‌வை..

சில பனம்பழங்களை சிதைக்கவே
மேலழுந்த அமர்ந்து விழுப்பிப்பவை..

நமக்கு பரிட்சயமான இந்த காக்கைகளுக்கு
கால்களைப் போன்று
முகங்களும்
மனிதனுடையவை..

புதன், 7 ஜூலை, 2010

ஒரு அரக்கனென நீ இருப்பாய் விகார மௌனத்துடன்..



யாருனக்கு இந்த மௌனத்தை
பரிசளித்தாரென தெரியவில்லை..

தலைமுறையின் அடையாளமாய்
உன் முதாதயரின் ஜீன்களில் இருந்து
அது உன்னில் படிந்திருக்க கூடும்..

நீ மௌனத்தை உடுத்தும்
போதெல்லாம்
விழா ஒன்றில் இருந்தோ
வீடு ஒன்றில் இருந்தோ
சந்திப்பு ஒன்றில் இருந்தோ
பலவந்தமாய் வெளியேற்றப்படுவதை போல
என் பேச்சுக்களை புறக்கணித்து
நம் காதலை வெளியேற்றுகிறாய்..

எரியும் உன் மௌனத்திற்கு
ஒரு சிகரட்டின் படிமம் கொடுத்து
அதை கரையவைக்க முயலுகையிலெல்லாம்
அது மேலும் கனன்று என்னை சுடும்..

பாழடைந்த நகரமொன்றின்
கோரத் தனிமையில் தள்ளி
நம் உறவின் கழுத்தை
கூரிழந்த பிளேடில் மெல்ல அறுக்கும்..

அத்தருணத்தில்
வெற்றிரவின் பேய் பிசாசுகளெல்லாம்
மனசினுள் புகுந்து
என்னை கொல்ல ஆரம்பிக்கும்..

யாதும் அறிந்து
எச்சலனமும் அற்று
ஒரு அரக்கனென நீ இருப்பாய்
விகார மௌனத்துடன்..

வெள்ளி, 2 ஜூலை, 2010

கல்லறையொன்றை கடக்க நேரும் போது



கல்லறையொன்றை
கடக்க நேரும் போது
ஒரு மசூதியைப் போன்றோ
ஒரு ஆலயத்தைப் போன்றோ
ஒரு கோவிலைப் போன்றோ
அதற்கு மரியாதை செலுத்துங்கள்..

ஏனெனில்,
உங்களுக்கு தெரியாமல்
உங்களுக்கு தெரிந்த
யாரையும் புதைத்திருக்கலாம் அங்கு..

உங்களுக்கு தெரியாமல்
உங்களையும் நாளை
யாரும் புதைக்கலாம் அங்கு..

வியாழன், 6 மே, 2010

மூன்று கவிதைகள்



முதல் கல்..

பைத்தியமென ஆடையணிவோரை ஒதுக்கும் நிர்வாணவுலகில்,
கோயில் சிலைகளின் துருத்திய அங்கங்களோடு
ஆண்கள் மத்தியில்
எந்நாணமுமற்று நடந்தார்கள் பெண்கள்..

எச்சிரமமுமின்றி மிகச் சாதாரணமாய்
யதார்த்தப் பார்வை பார்த்தார்கள் ஆண்கள்..

எல்லா ஆடையும் பூண்டிருந்த
என் மனதில் பொங்கிப் பெருகிய விரகம்
விழிகளைப் பெண்களில் அந்தரங்க அங்கங்களில் ஊர விட்டது..

நான் நிறம்மாறுவதை அறிந்த கூட்டம்
கல்லெடுத்து என்னைத் துரத்த,
தப்பிக்க ஓடி
தடுக்கி விழுந்தேன் கர்த்தனின் மடியில்..

விசாரித்த கர்த்தன் எறிந்தான் முதல் கல்..


-------------------



ஒரு சுடு சொல்


ஓணானென
எண்ணச்சுவரில்
ஒளிந்தும் தலைக்காட்டுவதுமாய் இருக்கிறது
ஒரு சுடு சொல்
தூக்கம் எரிந்து சாம்பலான இந்த இரவில்
அலையென
தரைக்கடலில் புரண்டு புரண்டு படுக்கும்
என் கைகளுக்கு
எக்கல்லும் அகப்படவில்லை அதைக் கொல்ல..

-----------------------------------------------------



நீ

கடவுளின் கைகள் அனுபிய
தூய ஆறுதலாய் நீ வந்தாய்

எனது புன்னகையும் மகிழ்ச்சியும்
உனதன்பின் பெருவெளியில்
நிம்மதியாய் உயிர் வளர்த்து திளைத்தன..

பூக்களாய் உனது கருனைகள்
உதிர்ந்த போதெல்லாம்
என் மனப்புல்வெளிகளில்
அவை பனித்துளிகளாய் நிறைந்தன..

வானம் தன்னை திறந்து
உச்சரித்த பரிசுத்த வார்த்தையின்
புனிதமாய் நீ இருந்தாய்..

கொடுக்கப்படுகிற யாவும்
எடுக்கப்படும் என்பதை நீ
உணர்த்திய தருணத்தில்..

வாழ்வின் எல்லா வீதியிலும்
பூத்துக் குலுங்க
நீ நட்ட மரங்கள் யாவும்
சிலுவைகளாய் மாறி இருந்தன...

திங்கள், 1 மார்ச், 2010

சொல்லப்படாத ஒரு காதல்




சொல்லப்படாத ஒரு காதல்
தன் கன்னிமையின் கர்வத்தோடு
இன்னும் இருக்கிறது
புதிதாய் எனக்குள்...


வழங்கப்படாத ஒரு பரிசைப் போன்று
அது பழமையடைவதில்லை..


பராமரிப்பின்றி கிடத்தப்பட்ட
ஒரு பொருளாக
தூசிப்படிவதுமில்லை..

ஒரு கிழமையில்
ஒரு தருணத்தில்
ஒரு நொடியில்
சொல்லப்படுவதற்காய்
காத்திருக்கிறது அது..

உனக்குள்ளும் இது போலொரு
சொல்லப்படாத காதல்
காத்திருக்கலாம்
எனக்காகவோ
வேறெவருக்காகவோ

வியாழன், 25 பிப்ரவரி, 2010

அனாதரவான வார்த்தை




திசை தொலைத்த
ஒரு பறவையின் பதற்ற அச்சத்தோடு
தனக்கான இடமொன்றை துழாவி
அலைந்தது அந்த வார்த்தை..

ஒரு கர்ப்பகிரகமோ
ஒரு பலிப்பீடமோ
ஒரு தொழுகைக்கூடமோ
மறுதலித்திருக்கலாம் அதனை..

பறவையின் இறகைப் போன்றோ
பூவின் மடலைப் போன்றோ
மேகத்தின் துளியை போன்றோ
தவறவிடப்பட்டிருக்கலாம் அது...

மீள் வாசிப்பின் சமயத்தில்
தேவையற்றதென
நிராகரிக்கப்பட்டிருக்கலாம்
ஒரு கவிதையில் இருந்தும்..

கோடிட்ட இடமொன்றில்
நிரப்பப்பட வேண்டியதாய்
திட்டமிட்டு கைவிடப்பட்டும்
இருக்கலாம்..

குழந்தைக்கான
தாலாட்டில் இருந்தோ
கதையில் இருந்தோ
புறக்கணிக்கப்பட்டும் இருக்கலாம்..

இப்புவியில்
மறுதலிக்கப்பட்ட
தவறவிடப்பட்ட
நிராகரிக்கப்பட்ட
கைவிடப்பட்ட
புறக்கணிக்கப்பட்ட என்று
அனாதரவானவை ஏராளம்
இவ்வார்த்தையைப் போல்..

புதன், 17 பிப்ரவரி, 2010

துரோகத்தின் கத்தி




முதுகில் ஆழப்பாய்ந்த
வலியோடு இரத்தம் சுவைத்திருந்தது
துரோகத்தின் கத்தி ஒன்று..

நேற்று
இதே கத்தி
எவரின் முதுகிலேயோ
உயிர்க் குடித்திருந்திருக்கலாம்..

நாளை
யாரோ ஒருவரின்
முதுகில் பாய
குறி வைத்துக்கொண்டிருக்கலாம்..

யாதொரு நேரத்திலும்
யாதொரு இடத்திலும் இருந்து
இந்த கத்தி பாய்ந்து வரலாம்
நம் நம்பிக்கைகளை
மணல் துகளாக்கியவாறு..

மற்றக் கத்திகள் போலில்லை
துரோகத்தின் கத்தி..
இது குத்தப்பட்டப் பிறகு
வெறுப்பை கக்குபவை..

உறவுகளின் மீதான நம்பிக்கையை
மறுப்பரிசீலனைக்கு உட்படுத்தி
சந்தேகத்தை உள்ளூற வைப்பவை..

யாவரும் ஏதாவது ஒரு தருணத்தில்
எவராவது ஒருவரால் குத்தப்பட்டு
இதன் கசப்பை அனுபவித்திருந்தாலும்
தம் மனதுக்குள் மறைமுகமாய்
வைத்திருக்கின்றனர் இதனை..

பயன்படுத்தியவர்
பயன்படுத்தாதவர் யாவரும் இதனை
கூர் தீட்டி தயார் நிலையில்
வைத்திருக்கின்றனர்
ஒரு முதுகை எதிர்பார்த்து..

பின் வரும் நாளின்
கோர கணமொன்றில்
எவரின் முதுகிலாவது
இதே கத்தி செருகப்படலாம்
கொடும் வன்மத்தின் அடையாளமாய்
என் கைரேகைகளுடன்..

செவ்வாய், 3 மார்ச், 2009

கரப்பான் பூச்சி வார்த்தைகள்



மெல்லிய மேனியின்
உள்ளிருந்து ஒரு பயம்
ஆபாய அதிர்வுகளை
அனுப்பிக் கொண்டிருந்தாலும்
உன் வற்புறுத்தலுக்கு மடங்கி
வர சம்மதித்தேன்..

வீட்டில் வெவ்வேறு பொய்யுரைத்து
ஊருக்கு தெரியாமல் துப்பட்டாவில்
முகம் மறைத்து
புறப்பட்டேன் உன்னுடன்..

வெயில் ததும்மும் சாலையில்
வேகம் குறையாமல் வாகனத்தை நீ முடுக்க
தேகம் பிரியாமல் நானுன்னை பிணைக்க – இன்ப
போகம் தளராமல் பயணித்தோம்

மனித நகர் விலகி
தனிமை நகர் நுகர்ந்தோம்
மணிக்கணக்கு தெரியாமல்
இனிக்க இனிக்க இன்பமுண்டோம்..

கண்ணாமூச்சி விளையாடினோம்
களைக்கும் வரை ஓடிப்பிடித்தோம்
என்னென்னவோ பேசிக்களித்தோம்
எண்ணியவை எல்லாம் செய்தோம்..

கோயில் சிலை மார்புகளையும்
குணமிழிந்து பார்க்கும்
கொடுங்காம பூனைகள்
குறுக்கிட்டன நமக்குள்

பட்டாம் பூச்சியாய்
பறந்திருந்த என்னை, விரலடைத்து
நிறம் பூசிய சிறகை பிய்தெறிந்து
சுவைக்க என்னுடலை
சவைத்து உண்ட மூர்க்கதனங்களை
நீயும் பார்த்துதானிருந்தாய்
எதிர்க்க துணிவின்றி..

கூட்டி குவித்து
குப்பையாய் என்னை வாரி
மீண்டும் வீட்டில் வீசி சென்றுவிட்டாய்..


அடுத்த மணி அடிக்கவிடாமல்
எடுப்பாய் என் அழைப்புகளை
சமீபங்களில் கடைசிவரை
அடித்தாலும் பதிலில்லை..


உன் நண்பர்கள் வழியே
அணுமதி பெற்று
அலுவலகம் வந்தேன்
உன்னை காண..

ஆறுதலாய் உன் தோள்களில் சாய்ந்து
அழுதென் பச்சை துயரங்களை எல்லாம்
சருகாக உகுக்க வேண்டும்
என்றெண்ணி வந்த என்னை
பந்திக்குப்பின் எறியும் இலையாய்
சந்திப்பில் நீ பார்த்தாய்..

“என்னை பார்க்க வேண்டும் என்றாயாமே ?”
“என்ன விஷயம் ?”
“எதுவும் உதவி வேண்டுமா ?” என்று
அந்நியனாய் அசைந்தன உன் இதழ்கள்


“பணமேதும் தேவையென்றாலும்
தயங்காமல் கூறு” என்று
கரப்பான் பூச்சியாய் ஊறிய வார்த்தைகள்
உண்டாக்கியது
உன்மீது அருவருப்பை..

“உன்னை காதலித்ததற்கு
அந்த காமுகர்களுக்கு
ஆசை நாயகியாய் இருந்திருக்கலாம்”
என்று அலறத்தோன்றியது எனக்கு

ஞாயிறு, 1 மார்ச், 2009

புல்லாங்குழல்
















துளை துளையாய் கசிந்து
இழை இழையாய் எமது
இறுக்கத்தை களைய
எங்கு கற்றாய் ?

வறுமை சூரியன்
வயிற்றை சுடுகையிலும்
குளுமையை இதழ்களில்
குழுமிட வைக்க
உனக்கே இயல்கிறது..

கண்ணீர் முட்டி
கரையுடைகிற கண்களில்
உறக்கத்தை ஊட்டி
இமைகளை பூட்ட
உனக்கே தெரிகிறது..

உடைப்பை திறந்து
உனது வெள்ளம் பாய்கையில்
இழப்பே நிவாரணமாகிறது..

உன் துளை திரியில்
இசைதீ ஏற்றபடுகையில்
மெழுகாய் உருகி கரைகிறது
மென்மையற்ற இதயங்களும்..

காதலன் விரல் தொடும் போது
கண்மூடும் பெண்ணை போல
நீ வருடும் போது
மூடிவிடுகின்றன எம்
புலன்களின் இமைகள்..

உன்னை
தடுப்பு போட்டு
தனிமையில் தேங்கையில்
விடுப்பு போட்டு
வெளியேறுகிறது விரக்தி..

பெண்ணோடு உதடு ஒட்டையில்
பேரின்ப சுவர்கள் திறந்திடும்
உன்னோடு உதடு ஒட்டையில்
உறைந்த நாளங்கள் எழுந்திடும்..

-ஆதி

வெள்ளி, 27 பிப்ரவரி, 2009

தேடல்





யாரென உணர
தனிமை திறந்து
பேரமைதிக்குள் நுழைந்தேன்

என் மௌனத்தின் சப்தம்
மலைகளிலும்
பாறைகளிலும் மோதி
நொறுங்க நுணுகின..

விழிமத்தியில் விளக்கேற்றி
வெளிச்சமாய் விரிந்தேன்
பேரண்டத்தின்
பேரெல்லை வரை..

ஒவ்வொன்றாய் வெளிநடந்தன
உணர்வுகள் என்னுள் இருந்து..

வெறிநாயின் முகமும்
குருதி வடிகிற வாயுமாய்
ஒருத்தன் வெளியேறினான்..

யாரனெ வினவினேன்

பதில்:
நான் குரோதம்

அடுத்தொருவன்
கைப்பையுள்
பொதிந்த முகமூடிகளுமாய்
வாசல் கடந்தான்..

யாரென வினவினேன்

என் பெயர் துரோகம்
எனச் சொன்னான்

பருத்த உடலும்
திருப்தி இல்லா முகமுமாய்
இன்னொருத்தன்

நீ யாரப்பா ?

பதில்:
ஆசை

பெருமை பொதிந்த தோற்றமும்
பெரும்பாலும் பேசாத இதழுமாய்
இன்னொருத்தன்

உன் பெயர் ?

பதில்:
ஏளனச்சிரிப்புடன்
என்னைப் பார்த்துச் சொன்னான்
நான் அகந்தை..

ரோகத்தில் சுருங்கிய முகமும்
புண்ணுடைந்து சீல்வழிகிற
புலன்களுமாய்
மற்றொருவன்

நீ ?

பதில்:
காமம்

மழைத்துளி போன்ற விழிகளும்
பூவெளி போன்ற புன்னகையுமாய்
ஒருவன்

யாரென வினவினேன்

பதில்:
இதயத்தின் இமைதிறந்து
எனைப் பார்த்து
முறுவலுடன் கூறினான்
நான் அன்பு

முற்றிய வயதும்
நரைத்த தாடியும்
அழுக்கு சட்டையுமாய்
ஒரு கிழவன் வெளிவந்தான்

நீங்கள் யார் ?

பதில்:
உனக்குள் உள்ள என்னை
உலகில் தேடுகிறாய்
நான் அமைதி
நான் நிம்மதி
நான்தான் ஞானம்

நீ யாரென
அனைவரின் சுட்டுவிரலும்
எனை நோக்கி நீள..

உரைத்தேன்:
நான் மனிதன்

ஐம்புலன் அதிர
ஐம்பொறிகள் சிரித்தன
அந்த பெரும்சப்தத்தில்
என் பேரமைதி கிழிய
தெறித்தேன் ஒரு துளியாய்
வெளியே...

நான் யாரென்ற வினாவுடன்..


-ஆதி

தாயக பூக்கடை













சூரியன் திணிந்தும்
சுருங்கா இருட்டாய்

உலகத்தின் உருகாட்டும்
கண்ணாடியாய்

இழிந்ததின் அடையாளமாய்

குருட்டு நீரே
உன் மீதுதான் எத்தனை
கோணங்கள்..

சுகாதாரம் முழங்கும்
சுயநல சமூகம்
தன் கழிவு யாவயும்
உன் மேல் கிடத்தி
சாக்கடை என்றே உன்னை
சாற்றும்..

கைப்பட்ட யாவையும்
உன் மெய்ப்பட எறிந்து
தேங்க வைத்து
தெருவைக் கெடுக்கும்..
முன்னேற விடாமல்
உன்னை தடுக்கும்..

கூடாரமிட்டு கிருமிகள்
சேதாரமாக்கும் நோய்களை
மகப்பெற்றிடினும்
அவை கருவுற்றது
யார் செய்கைகளால்.. ?

முந்நீர் தண்ணீர்
நன்னீர் எனும்
உயர்ச்சி யாவும்
நீ கரி பூசி கொண்டதால்தான்
மற்றவைகளுக்கு..

தாள்ந்தோர் உயர்வரெனும்
தத்துவ மொழிப்படி இனி நீ
சாக்கடை அல்ல
தாயக பூக்கடை..

-ஆதி

வியாழன், 26 பிப்ரவரி, 2009

வெக்கை

















வெயிலில் மழைபோல்
வழியும்
உன் கோப விழிகளின்
கண்ணீர்துளிகள்..

குமுறும் வானமாய்
உன் மௌனத்தினுள்
வார்த்தைகள்..

பேசாமலும்
பேசிவிட முடியாமலும்
தாழ்ந்துயரும் உன் பொறுமையின்
அளவுகோடுகள்..

ஆதிக்க செருக்கில்
முகம்சுழித்த சொற்களால்
என் குடும்பத்தார்
உன் இதயம் கிழித்த
தருணங்களில்...

நானும்-
அமைதியாய் தானிருந்தேன்
உன் அவமானங்களை
கண்டும் காணாத கயவனாய்...

வெயில் காற்று சுடும்
மின்சாரமற்ற
இந்த இரவில்..

அழுது அழுது
ஆழ்ந்த தூக்கத்தில் எழுந்து
'வெக்கையா ?'
'விசுறவா ?' என்கிறாய்..

பதிலற்று குற்ற உணர்வில்
நீர் தெளித்த பூவாய்
ஈரமாயின என் இமைகள்..

உன் மனதுக்குள் இருக்கும்
வெக்கைக்கு
யார் விசுறுவது ?

- ஆதி