Photobucket

வெள்ளி, 16 ஜூலை, 2010

உயிர்




ஒருமுறை சொர்க்கத்தில் சேர்க்கிறாய் - பின்
ஒருமுறை நரகத்தில் வார்க்கிறாய்
ஒருமுறை முளைக்கட்ட விதைக்கிறாய் - அடி
ஒருமுறை முளையறுத்து மிதிக்கிறாய்
ஒருமுறை உன்னைத்தான் பார்ப்பதற்கு - நீ
உயிரையே வாடகைக் கேட்கிறாய்
ஒருநொடி நாந்தான் மகிழ்ந்ததால் - என்
உணர்ச்சிக்கு தடைப்பல விதிக்கிறாய்

எதுவரையில் என்பயணம் அறியவில்லை - அதை
என்றைக்கும் அறிந்துவிட முயன்றதில்லை
இதுவரையில் என்வேர்கள் அசைந்ததில்லை - அடி
இளவெட்டு தூறல்களில் நனைந்ததில்லை
பொதுவாக கனவுகளில் மிதந்ததில்லை - உயிர்
புன்னகையோ இமைகளில் வழிந்ததில்லை
மெதுவாக என்னைநீ மாற்றிவிட்டாய் - என்
மேகத்தில் மழையீரம் பூசிவிட்டாய்

திறக்காத விழிகளை திறந்துவிட்டாய் - ஒரு
திருவோடாய் இதயத்தை ஏந்தவிட்டாய்
மரக்காதில் வார்த்தைகளை எதிரொலித்தாய் - உன்
மடிமீது எந்தலையை மலரவிட்டாய்
அடங்காத ஆசைகளில் அடுப்பெரித்தாய் - நான்
அழுகின்ற நீர்மங்களில் நெய்யெடுத்தாய்
இடக்காக வார்த்தைகளை இதழ்நிறைத்தாய் - என்
இதயத்தைக் குறிவைத்து எதிலடித்தாய்

இளகாதப் பாறையென எண்ணி நிமிர்ந்தேன் - உன்
இமைக்காற்றில் பொடிப்பொடியாய் இடிந்து தகர்ந்தேன்
பழகாது பெண்களிடம் தள்ளி இருந்தேன் - உன்னை
பார்த்ததுமே பழகிவிட ஆர்வம் அணிந்தேன்
கிழடான காதல்கதைக் கேட்டுச் சிரித்தேன் - விழி
கிளர்ச்சியிலே உயிரோடு கிழிந்து உதிர்ந்தேன்
மலடான மேகமென மயங்கி நகர்ந்தேன் - ஒரு
மலர்நினைவில் மழைப்பெய்ய கண்கள் இருண்டேன்

விடியாத இரவுவந்தால் பகல்கள் உண்டா ? - உன்
வீண்பிடி வாதத்தில் எந்தப் பயனுமுண்டா ?
முடியாது எனச்சொல்லி முகத்தை மறைத்தாய் - என்
மூச்சுக்கு கட்டாயத் தூக்கு கொடுத்தாய்
அடிக்காதல் வேறுசெயதால் இனிமேல் மீண்டும் - உயிர்
ஆன்மா இன்னொன்று புதிதாய் வேண்டும் - என்னைப்
பிடிக்காத ஒருத்திக்காய் சாக ஒன்று - என்மேல்
பிரியமான ஒருத்திக்காய் வாழ மற்றொன்று.

வியாழன், 15 ஜூலை, 2010

தலைப்பற்ற கவிதை - 6




கானல் நீர் ஊறும் வெளியில்
இளைப்பார நிழல் தேடி
தன் நிழலை கண்டமர்ந்து
ஏமாந்து ஏமாந்து பறக்கிறது
வண்ணத்துப் பூச்சி காற்றின் வழியில்..

பொங்கி பொசுக்கும் வெயிலில்
மங்கும் சிறகுகளின் நிறங்களையும்
பொருட்படுத்தாது
நீள்கிறது அதன் தேடல்..

விரிந்திருக்கும் மணலின் வெஞ்சூட்டில்
நொடிந்து இரத்தம் சுண்டி சாகுமிடத்தில்
என்றைக்காவது முளைத்து கிளைக்கலாம் ஒரு மரம்
வண்ணத்துப் பூச்சியின் தேடலெதையும் அறியாமல்..

திங்கள், 12 ஜூலை, 2010

தலைப்பற்ற கவிதை-5




பால்யதில்
ஆழ்ந்த நிசி வேளையின்
அடர் உறக்கத்தில்
என்னை வெளியெறிய எண்ணமொன்று
தொலைந்து போனது
ஏதோ ஒரு திசையில்..

மீளாத அவ்வெண்ணத்தை
மீட்கவோ தேடவோ
முற்படவில்லை நானும்..

பாதை தவறி
என்னிடம் மீள தவித்து
தன் வெளி நெடுக்க என்னை கூவி
தேடுவதையும்
அறிந்திருக்கவில்லை நான்..

தூர தூரங்களிலும்
அறிமுகமில்லாத ஊர்களிலும்
தேடி தூளாவி அலைந்து
என்னை கண்டுவிட முடியாமல் சோர்ந்து
விரக்தியுற்றிந்த ஓர் இரவில்
நிகழ்ந்தது என்னோடான அதன் சந்திப்பு..

எனினும்,
அது என்னையும்
நான் அதனையும் அறிந்து கொள்ளவில்லை..

இருவரும்
எங்கள் அடையாளங்களை தொலைத்து
சிதலமுற்றிருந்தோம் அத்தருணத்தில்..

புதன், 7 ஜூலை, 2010

ஒரு அரக்கனென நீ இருப்பாய் விகார மௌனத்துடன்..



யாருனக்கு இந்த மௌனத்தை
பரிசளித்தாரென தெரியவில்லை..

தலைமுறையின் அடையாளமாய்
உன் முதாதயரின் ஜீன்களில் இருந்து
அது உன்னில் படிந்திருக்க கூடும்..

நீ மௌனத்தை உடுத்தும்
போதெல்லாம்
விழா ஒன்றில் இருந்தோ
வீடு ஒன்றில் இருந்தோ
சந்திப்பு ஒன்றில் இருந்தோ
பலவந்தமாய் வெளியேற்றப்படுவதை போல
என் பேச்சுக்களை புறக்கணித்து
நம் காதலை வெளியேற்றுகிறாய்..

எரியும் உன் மௌனத்திற்கு
ஒரு சிகரட்டின் படிமம் கொடுத்து
அதை கரையவைக்க முயலுகையிலெல்லாம்
அது மேலும் கனன்று என்னை சுடும்..

பாழடைந்த நகரமொன்றின்
கோரத் தனிமையில் தள்ளி
நம் உறவின் கழுத்தை
கூரிழந்த பிளேடில் மெல்ல அறுக்கும்..

அத்தருணத்தில்
வெற்றிரவின் பேய் பிசாசுகளெல்லாம்
மனசினுள் புகுந்து
என்னை கொல்ல ஆரம்பிக்கும்..

யாதும் அறிந்து
எச்சலனமும் அற்று
ஒரு அரக்கனென நீ இருப்பாய்
விகார மௌனத்துடன்..

செவ்வாய், 6 ஜூலை, 2010

ஒரு ஜென்னாய் இரு - 2

பழைய குளம்
குதித்தது தவளை
தண்ணீர் சத்தம்


இந்த கவிதையில் நான் உணர்ந்து கொண்டது என்ன வென்று சொல்ல விழைகிறேன்..

அவரவர் மனநிலைக்கேற்ப கருத்துக்கள், கோணங்கள் மாறும்..

என் புரிதல் இதுதான்..

இந்த கவிதை ஹைகூ கவிதையின் பேராசான் பாஷோவால் எழுதப்பட்ட கவிதை, பாஷோவுக்கு பிறகு ஹைகூ கவிதைகளே எழுதப்படவில்லை என்றும் சொல்கிறார்கள்.. காரணம் ஹைகூவி இலக்கணத்தை யாரும் முழுதாக பின் பற்றவில்லை என்பது ஒரு வாதமானாலும், ஹைகூ கவிதைக்காக வீச்சும் இல்லை என்பது இன்னொரு வாதம்..

தமிழில் ஹைகூ குறித்து எண்ணற்ற ஆய்வுகள் நிகழ்ந்திருக்கின்றன, நிகழ்கின்றன.. ஆய்வறிக்கை சமர்ப்பித்த ஒவ்வொருவரின் கருத்து ஒவ்வொரு மாதிரி இருக்கின்றது.. ஆதாவது ஹைகூவை ஆய்வு செய்தவர்களின் ஹைகூ குறித்த புரித்தல்கள் ஒரு பட்டில்லை..

ஆனாலும் அவர்களின் ஆய்வு நூல்களில் இருந்து பல அரிய தகவல்களை பெற இயல்கிறது..

சரி இந்த பாஷோவின் கவிதையை பற்றி பார்ப்போம்..

ஹைகூ விதிப்படி ஒரு காட்சியை பாஷோ அப்படியே பதிவு செய்திருக்கிறார்.. இந்த கவிதைக்கான உண்மையான பொருள் இந்த கவிதையை அவர் வடிக்கும் போது அவரின் பக்கத்தில் இருந்திருந்தாலோ, அல்லது பாஷோவாக இருந்திருந்தாலோ மட்டுமே அறிந்திருக்க முடியும்.. மற்றப்படி சொல்லும் கருத்துக்கள் எல்லாம் நம் மனதுக்கு தோன்றும் கருத்துக்களே....

பழைய குளம் என்பதை நான் வாழ்க்கையாக எடுத்துக் கொள்கிறேன்..

இந்த வாழ்க்கை பழையதுதானே பலர் வாழ்ந்தது, பலர் வாழ்ந்து கொண்டிருப்பது, பலர் வாழவிருப்பது..


குளத்தில் தவளை குதித்தது தண்ணீர் சத்தம் என்பதன் மூலம், குளம் முன்பு அமைதியாக இருந்திருக்க வேண்டும்.

அமைதியான ஒரு வாழ்வில் திடீரென்று ஒரு பெரும் துயரோ, சோதனையோ, மகிழ்ச்சியோ உண்டாகும் போது வாழ்வும் இந்த குளம் மாதிரித்தான் அமைதி இழக்கிறது, ஆர்ப்பறிக்கிறது..

பிறகு அந்த குளம் அமைதியாகி இருக்க வேண்டும்..

குளத்தோடு தவளையும் ஒன்றாகி இருக்க வேண்டும்.. அப்புறம் தவளை குளத்துக்குண்டானதாய் மாறிவிடுகிறது..

நம் வாழ்வில் நிகழும் நேர்ச்சிகளும் அப்படித்தான் நம்முடையதாய் ஆகிவிடுகிறது, அந்த நேர்ச்சியை, அந்த நிகழ்வை நாம் விரும்புகிறோமோ இல்லையோ, அது நமக்குண்டானது, நம்முடையது என்றாகிவிடுகிறது.. மீண்டும் அந்த தவளை குளத்தில் இருந்து வெளியேறவும் செய்யலாம், அப்போதும் அந்த குளம் கொஞ்சம் அமைதி இழக்கலாம், மீண்டும் தவளை குதிக்கலாம், குளம் சப்திக்கலாம்.. குளத்திலும், வாழ்விலும் இது தொடரும் நிகழ்வுதான்..

வெள்ளி, 2 ஜூலை, 2010

ஒரு ஜென்னாய் இரு -1

இவ்வுலகில் தோன்றிய பல ஆன்மீக தத்துவங்களில் ஜென்னும் ஒன்று..

தாவ் என்னும் மதத்தில் இருந்தே ஜென் தோன்றியதாக கூறுவார்கள்..

தாவ் மனிதனும் இயற்கையும் இணக்கமாக வாழ்வது என்பதே இதன் கருத்து. தாவ் மதத்தை ஆரம்பித்தவர் சாங்லிங் என்பவர்.

ஜென், தாவ் மதத்தில் இருந்து தோன்றியதென்று கூறினாலும்..

தியானம் - தியான் - ஜென் என்னும் ஓஷோ, ஜென் இந்திய ஆன்மீக தத்துவங்களில் இருந்தே பிறந்ததாக கூறுகிறார்..

எனக்கு ஓஷோவின் கருத்தில் உடன்பாடு இல்லை, தியானம் என்பது எல்லா ஆன்மீகவாதிகளுக்கும் பொதுவானது..

இந்திய ஆன்மீக மேதைகளால் கற்பிக்கப்பட்ட குண்டலினி என்பதே முழுதாக இந்தியாவில் தோன்றிய ஒன்றல்ல..

7 குண்டலினிகளில் 2 மட்டுமே நாம் அறிந்தது, மற்ற 5-ல் 2 கிறிஸ்துவர்களிடம் இருந்தும், 3 சூஃபிகளிடம் இருந்தும் பெற்றவை..

அதாவது இந்த தியானம் என்பது இந்தியாவில் மட்டும் தோன்றிய ஒன்றல்ல, அது உலகளாவி பரந்த ஒன்று..

அப்படி இருக்க ஜென் - தியான் என்பதெல்லாம் சொல்வதற்கு அழகாக இருக்குமே அன்றி, ஏற்க கூடியதல்ல..

நம் ஆன்மீகத்திற்கு இருக்க கூடிய பெரும் சிறப்பென்ன வென்றால், தியானத்துக்கென்று நம்மிடம் உபநிஷங்கள் இருக்கின்றன, இவைப் போன்ற நூல்கள் மற்ற மதங்களில் இல்லை..

அஸ தோமா சத் கமய
தம ஸோமா ஜோதிர் கமய
மிருத் யோமா அமிர்தம் கமய
ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஓம்


இந்த உபநிஷ மந்திரமானது எல்லா ஆன்மீக கொள்ளைகளுடனும் ஒற்றுப் போகிறது..

அஸ தோமா சத் கமய

பொய்மையில் இருந்து என்னை மெய்மைக்கு அழைத்து செல்வாயாக

தம ஸோமா ஜோதிர் கமய

இருளில் இருந்து என்னை வெளிச்சத்துக்கு அழைத்து செல்வாயாக

மிருத் யோமா அமிர்தம் கமய

மரணத்தில் இருந்து மரணமற்ற நிலைக்கு என்னை அழைத்து செல்வாயாக


இதைத்தான் அனைவரும் தேடுகிறோம்.. இந்த நிலையை அடைய துறவிகள், காடு சென்று தவமிருந்தார்கள் என்கிறோம்..

இதைத்தான் ஜென்னும் தன் மூன்று பண்புகளாக கூறுகிறது. மௌனம், தனிமை, ஏற்புத்தன்னை.

மௌனம் - தவம்

தனிமை - காடு புகல்

ஏற்புத்தன்மை - விழிப்புநிலை

இப்படித்தான் ஓப்பீடு செய்துக் கொள்கிறேன் நான்..

ஏற்புத்தன்மை

இதனை பெரும் ஆன்மீகவாதிகள் எல்லோரும் நமக்கு போதித்திருக்கின்றனர்..

அஸ தோமா சத் கமய இந்த வரிக்கும் ஏற்புத்தன்மைக்கும் ஓற்றுமைகள் உண்டு..

இந்த வாழ்வில் நிகழும் ஒவ்வொன்றும் எனக்கானது, என்னுடையது, நான் சந்திக்க வேண்டியது என்னும் விழிப்பு நிலையை தருவது..

ஒரு இன்பத்தில் இருந்து நம்மால் எப்படி விலகி நிற்க இயலாதோ அவ்வாறே ஒரு துன்பத்தில் இருந்தும் நம்மால் விலகிவிட இயலாது, வாழ்க்கை உனக்கு பரிமாறும் ஒவ்வொன்றையும் ருசி, அது உனக்கானது, எதை நாம் சுவைக்க மறுக்கிறோமோ, அதனை நாம் இழக்கிறோம், அதனால் நாம் இழப்பது வாழ்வையும் தான்..

இதுதான் ஏற்புத்தன்மையின் அடிப்படைத் தத்துவம் என்றாலும், ஏற்புத்தன்மை என்னும் பண்பில் பல உட்பொருள்கள் உண்டு..

அதாவது "நீ நீயாய் இருத்தல்" என்பதும் "நான் நானாய் இருத்தல்" என்பதும் "நாம் நாமாய் இருத்தல்" என்பதும் இந்த ஏற்புத்தன்மையின் உட்பொருளாகும்

புத்தம் என்பது புத்தனாய் வாழ்த்தல் என்பார்கள்..

ஆனால் நான் நானாய் வாழும் பொழுது புத்தனாய் வாழ இயலாதுதானே..

புத்தனை எனக்குள் உயிர்ப்பித்து, புத்தனை எனக்குள் வாழ்வித்தாலும் நானாய் வாழ இயலாதுதானே..

புத்தன் என்பவன் ஒரு வாசல், ஒரு வாசலின் வழியாக நான் உள்ளும் நுழையலாம், வெளியும் போகலாம், உள் நுழைத்தல் என்பது என்னுள் ஆழ்ந்து போதலாகவும், வெளியே செல்வது என்பதை நானல்லாதவைகளில் இருந்து வெளியேறுவதாகவும் கருதுகிறேன்..

என்னுள் ஆழ்ந்து போகும் போதோ, நானல்லாதவைகளில் இருந்து நான் வெளியேறும் போதோ நான் கலப்படமற்ற நானாக இருக்கிறேன்..

நான் நானாகவும், நீ நீயாகவும் இருத்தல் என்பது யாவரும் சமம் என்பதையும் காட்டுக்கிறது..

யாவரும் சமம் எனும் போது, இறைவனும் நாமும் கூட சமம் தானே ?

எங்கும் இறைவன் நிறைந்திருக்கின்றான் என்றால், எங்கும் நானும் நிறைந்திருக்கிறேன் தானே ?

இந்த சிந்தனையோடு இரு கவிதைகளை பார்ப்போம்..

பழைய வீடு
ஊர்ந்து செல்கிறது நத்தை
புத்தனின் முகம்..

----------

பழைய குளம்
குதித்தது தவளை
தண்ணீர் சத்தம்


தொடரும்..

தலைப்பற்ற கவிதைகள் - 4




என்றோ இருந்த பிரியத்தின் விழைவாய்
இன்று வாங்கி வந்தேன்
கண்ணாடி தொட்டியும்
இரு மீன்களும்..

இம்முனையும் அம்முனையும்
இருதலை கொள்ளியாய் அலையும்
மீன்கள் துழாவலாம்
கண்ணாடி தொட்டிக்குள் ஒரு ஆழியை..

பெருநீர் பரப்பும்
உப்பு சுவையும் அற்ற‌தால்
மீன்களுக்கு பிடிக்காமல் போகலாம்
என் பிரியத்தையும்
இத்தொட்டியையும்..

இழ‌ந்த‌ ச‌முத்திரத்துயரின் தனிமையின் நின்று
‌மீளும் முய‌ற்சியில்
இர‌ண்டும் புண‌ர்ந்து உயிர்ப்பிக்கலாம் சில குஞ்சுகளை
நாளை அவை நம்பவும் கூடும்
கண்ணாடி தொட்டியே ஒரு கடலென..

கல்லறையொன்றை கடக்க நேரும் போது



கல்லறையொன்றை
கடக்க நேரும் போது
ஒரு மசூதியைப் போன்றோ
ஒரு ஆலயத்தைப் போன்றோ
ஒரு கோவிலைப் போன்றோ
அதற்கு மரியாதை செலுத்துங்கள்..

ஏனெனில்,
உங்களுக்கு தெரியாமல்
உங்களுக்கு தெரிந்த
யாரையும் புதைத்திருக்கலாம் அங்கு..

உங்களுக்கு தெரியாமல்
உங்களையும் நாளை
யாரும் புதைக்கலாம் அங்கு..

புதன், 30 ஜூன், 2010

சூஃபி கவிதைகள் (தமிழில்) - 3

என்னை நீ நேசிக்கிறாயா ?

தான் நேசிப்பளிடம் காதலனொருவன்
"என்னைக்காட்டிலும் நீ
உன்னை மிக நேசிக்கிறாயா ?"
என கேட்டான்

நேசிப்பிற்குரியவள் சொன்னாள்:
"என் வாழ்வானது உன்னுடையது
ஏனெனில்
"நான்" என்பது மாய்ந்தாயிற்று
எனை பொருத்தமட்டில்"

என் இருப்பு உனக்கும் மட்டுமானதே
ஏனெனில்
என்னிலிருந்து, என் செயல்களிலிருந்து
நான் மறைவுற்றேன்..

உன்னறிதல்களில் இருந்தே
ஒரு மேதையாகினேன்
ஏனெனில்
நான் கற்றன யாவும் மறந்திழந்தேன்..

உன் பலத்தால்தான்
என்னால் யாவும் இயல்கிறது
ஏனெனில்
என் பலமனைத்தும் தொலைத்திழந்தேன்..

நான் எனை நேசிக்கிறேன் என்றாலும்
உன்னையே நேசிக்கிறேன்
நான் உனை நேசிக்கிறேன் என்றாலும்
என்னையே நேசிக்கிறேன்..

-ரூமி


---------------------------

Do You Love Me?


A lover asked his beloved,
Do you love yourself more
than you love me?



The beloved replied,
I have died to myself
and I live for you.



I’ve disappeared from myself
and my attributes.
I am present only for you.



I have forgotten all my learning,
but from knowing you
I have become a scholar.



I have lost all my strength,
but from your power
I am able.



If I love myself
I love you.
If I love you
I love myself.

செவ்வாய், 22 ஜூன், 2010

சூஃபி கவிதைகள் (தமிழில்) -2

உனது கைகளிலொரு மாசற்ற குழைந்தையாக

நான் மிக உயர்ந்து மேலெழுந்த
எனதன்பின் அலையை
பிரளயமாய் உன்னில் பாய்ச்சுகிறேன்..

அது
உனது யாதொரு பயத்தையும், மாயையையும்
அழித்துவிடும்
சில நேரம் விழிகளை மூடு.

அவ்வாறு நிகழ்கையில்
உனது கைகளில் மாசற்ற குழந்தையாக
இறைவன் மாறுவான்..

பின் படைப்பு யாவற்றையும்
நீ கவனித்துக் கொள்ள கடவாய்..

- ஹஃபீஸ்

------------------



An Infant In Your Arms



The tide of my love
Has risen so high let me flood
over

You.

Close your eyes for a moment
And maybe all your
fears and fantasies

Will end.

If that happened
God would become an infant in your

Arms

And then you
Would have to nurse all

Creation!

சூஃபி கவிதைகள் (தமிழில்) -1


என் நேசன் தோன்றுகையில்


என் நேசன் என்முன் தோன்றுகையில்
எந்த விழியால்
அவனை காண்பேன் நான்?

என்னுடையதால் அல்ல..
அவனுடைய விழியால்
ஏனெனில்
அவனைத் தவிர யாராலும்
அவனை காணுதல் இயலாது..


-------------------


When My Beloved Appears


When my Beloved appears,
With what eye do I see Him?

With His eye, not with mine,
For none sees Him except Himself.

வெள்ளி, 21 மே, 2010

தலைப்பற்ற கவிதை - 3





பரிமாறிக்கொள்ள
பிரிவதற்கு முந்தையதோ
பிரிவிற்கு பிந்தையதோவான
நினைவுகள் நம்மிடம்
எதுவும் இருந்திருக்கவில்லை
அந்த சந்திப்பில்..

என் புது உறவுகளைப் பற்றிய
பெருமித வார்த்தைகளோ
ஏகாந்த காலங்களில் உற்ற
வலி துயரைங்களையும்
பகிர்ந்து கொள்ளவில்லை..

மௌனத்தின் கதவுகளை பலமாய் சாத்திக் கொண்டு
நம்மில் ஒருவர் உதிர்க்கப் போகிற
முதல் வார்த்தைக்காக
காத்து கிடந்திருந்தோம்..

உன் எதிர்ப்பார்ப்புக்கள் என்னுடையதையும்
என் எதிர்ப்பார்ப்புக்கள் உன்னுடையதையும்
எதிர்நோக்கி ஏக்கத்தவமிருந்ததை உணர்ந்திருந்தும்
இருவரும் நம் ஆங்கார அரியனையில்
அழுத்தமாய் அமர்ந்திருந்தோம்..

இதே ஆகாரந்தான்
அன்றொரு பிரிவுக்கு ஆதாரமாய் இருந்தது..
இன்றும் நம் களையாத மௌனத்தின்
கதவாய் இருக்கிறது..

நாம் நிறைய மாறி இருக்கிறோம்
உருவத்திலும்..
வாழ்விலும்..
என்றாலும்
மாறாமல் இருக்கிறது
நம் ஆங்காரம்
நம் காதலைப் போல்..

தலைப்பற்ற கவிதை - 2




ஏளன சிரிப்பின்
நிசப்தமான அரக்க ஓசைகள்
செவிப்பறை கிழிய
அதிர்ந்தது அன்றொரு நாள்..

அந்த சிரிப்புக்கான காரணம்
என் இயலாமையாகவோ
என் அறியாமையாகவோ
என் ரசனையின்மையாகவோ
என் கவனமின்மையாகவோ
என் தவறுதலாகவோ
ஒரு தர்ம சங்கடமான சம்பவமாகவோ
இன்னப் பிற
எதுவாகவும் இருக்கலாம்..

தப்புரைக்க சாத்தியமற்ற
காரணமாயினும்
தலை குனிவோடான
காயத்தை வழங்கிய அச்சிரிப்புக்கு
என்றைக்கும் தெரிய போவதில்லை
எச்சமாதானத்துக்கும் ஆறாத என் வலிகளை..

தலைப்பற்ற கவிதை - 1





ஊமையாய் இறுகிவிட்டிருந்தது
உன் வார்த்தையின் வலியக்கரங்கள்
என் உயிரின் குரல்வளையை நெரித்த
அத்தருணம்...

அது ஒரு மரணத்தைப் போல
தற்செயலான நேர்ச்சி அல்ல..

ஒரு படுகொலையை போல
திட்டமிடப்பட்ட நிகழ்வு..

என்றாலும்,
அதை நீ செய்திருக்க வேண்டாம்
உன் பூ உதடுகளால்..

வியாழன், 6 மே, 2010

மூன்று கவிதைகள்



முதல் கல்..

பைத்தியமென ஆடையணிவோரை ஒதுக்கும் நிர்வாணவுலகில்,
கோயில் சிலைகளின் துருத்திய அங்கங்களோடு
ஆண்கள் மத்தியில்
எந்நாணமுமற்று நடந்தார்கள் பெண்கள்..

எச்சிரமமுமின்றி மிகச் சாதாரணமாய்
யதார்த்தப் பார்வை பார்த்தார்கள் ஆண்கள்..

எல்லா ஆடையும் பூண்டிருந்த
என் மனதில் பொங்கிப் பெருகிய விரகம்
விழிகளைப் பெண்களில் அந்தரங்க அங்கங்களில் ஊர விட்டது..

நான் நிறம்மாறுவதை அறிந்த கூட்டம்
கல்லெடுத்து என்னைத் துரத்த,
தப்பிக்க ஓடி
தடுக்கி விழுந்தேன் கர்த்தனின் மடியில்..

விசாரித்த கர்த்தன் எறிந்தான் முதல் கல்..


-------------------



ஒரு சுடு சொல்


ஓணானென
எண்ணச்சுவரில்
ஒளிந்தும் தலைக்காட்டுவதுமாய் இருக்கிறது
ஒரு சுடு சொல்
தூக்கம் எரிந்து சாம்பலான இந்த இரவில்
அலையென
தரைக்கடலில் புரண்டு புரண்டு படுக்கும்
என் கைகளுக்கு
எக்கல்லும் அகப்படவில்லை அதைக் கொல்ல..

-----------------------------------------------------



நீ

கடவுளின் கைகள் அனுபிய
தூய ஆறுதலாய் நீ வந்தாய்

எனது புன்னகையும் மகிழ்ச்சியும்
உனதன்பின் பெருவெளியில்
நிம்மதியாய் உயிர் வளர்த்து திளைத்தன..

பூக்களாய் உனது கருனைகள்
உதிர்ந்த போதெல்லாம்
என் மனப்புல்வெளிகளில்
அவை பனித்துளிகளாய் நிறைந்தன..

வானம் தன்னை திறந்து
உச்சரித்த பரிசுத்த வார்த்தையின்
புனிதமாய் நீ இருந்தாய்..

கொடுக்கப்படுகிற யாவும்
எடுக்கப்படும் என்பதை நீ
உணர்த்திய தருணத்தில்..

வாழ்வின் எல்லா வீதியிலும்
பூத்துக் குலுங்க
நீ நட்ட மரங்கள் யாவும்
சிலுவைகளாய் மாறி இருந்தன...

திங்கள், 1 மார்ச், 2010

சொல்லப்படாத ஒரு காதல்




சொல்லப்படாத ஒரு காதல்
தன் கன்னிமையின் கர்வத்தோடு
இன்னும் இருக்கிறது
புதிதாய் எனக்குள்...


வழங்கப்படாத ஒரு பரிசைப் போன்று
அது பழமையடைவதில்லை..


பராமரிப்பின்றி கிடத்தப்பட்ட
ஒரு பொருளாக
தூசிப்படிவதுமில்லை..

ஒரு கிழமையில்
ஒரு தருணத்தில்
ஒரு நொடியில்
சொல்லப்படுவதற்காய்
காத்திருக்கிறது அது..

உனக்குள்ளும் இது போலொரு
சொல்லப்படாத காதல்
காத்திருக்கலாம்
எனக்காகவோ
வேறெவருக்காகவோ

வியாழன், 25 பிப்ரவரி, 2010

அனாதரவான வார்த்தை




திசை தொலைத்த
ஒரு பறவையின் பதற்ற அச்சத்தோடு
தனக்கான இடமொன்றை துழாவி
அலைந்தது அந்த வார்த்தை..

ஒரு கர்ப்பகிரகமோ
ஒரு பலிப்பீடமோ
ஒரு தொழுகைக்கூடமோ
மறுதலித்திருக்கலாம் அதனை..

பறவையின் இறகைப் போன்றோ
பூவின் மடலைப் போன்றோ
மேகத்தின் துளியை போன்றோ
தவறவிடப்பட்டிருக்கலாம் அது...

மீள் வாசிப்பின் சமயத்தில்
தேவையற்றதென
நிராகரிக்கப்பட்டிருக்கலாம்
ஒரு கவிதையில் இருந்தும்..

கோடிட்ட இடமொன்றில்
நிரப்பப்பட வேண்டியதாய்
திட்டமிட்டு கைவிடப்பட்டும்
இருக்கலாம்..

குழந்தைக்கான
தாலாட்டில் இருந்தோ
கதையில் இருந்தோ
புறக்கணிக்கப்பட்டும் இருக்கலாம்..

இப்புவியில்
மறுதலிக்கப்பட்ட
தவறவிடப்பட்ட
நிராகரிக்கப்பட்ட
கைவிடப்பட்ட
புறக்கணிக்கப்பட்ட என்று
அனாதரவானவை ஏராளம்
இவ்வார்த்தையைப் போல்..

புதன், 17 பிப்ரவரி, 2010

துரோகத்தின் கத்தி




முதுகில் ஆழப்பாய்ந்த
வலியோடு இரத்தம் சுவைத்திருந்தது
துரோகத்தின் கத்தி ஒன்று..

நேற்று
இதே கத்தி
எவரின் முதுகிலேயோ
உயிர்க் குடித்திருந்திருக்கலாம்..

நாளை
யாரோ ஒருவரின்
முதுகில் பாய
குறி வைத்துக்கொண்டிருக்கலாம்..

யாதொரு நேரத்திலும்
யாதொரு இடத்திலும் இருந்து
இந்த கத்தி பாய்ந்து வரலாம்
நம் நம்பிக்கைகளை
மணல் துகளாக்கியவாறு..

மற்றக் கத்திகள் போலில்லை
துரோகத்தின் கத்தி..
இது குத்தப்பட்டப் பிறகு
வெறுப்பை கக்குபவை..

உறவுகளின் மீதான நம்பிக்கையை
மறுப்பரிசீலனைக்கு உட்படுத்தி
சந்தேகத்தை உள்ளூற வைப்பவை..

யாவரும் ஏதாவது ஒரு தருணத்தில்
எவராவது ஒருவரால் குத்தப்பட்டு
இதன் கசப்பை அனுபவித்திருந்தாலும்
தம் மனதுக்குள் மறைமுகமாய்
வைத்திருக்கின்றனர் இதனை..

பயன்படுத்தியவர்
பயன்படுத்தாதவர் யாவரும் இதனை
கூர் தீட்டி தயார் நிலையில்
வைத்திருக்கின்றனர்
ஒரு முதுகை எதிர்பார்த்து..

பின் வரும் நாளின்
கோர கணமொன்றில்
எவரின் முதுகிலாவது
இதே கத்தி செருகப்படலாம்
கொடும் வன்மத்தின் அடையாளமாய்
என் கைரேகைகளுடன்..

வெள்ளி, 23 அக்டோபர், 2009

இந்தா பிடி உன் தாலி

ஆகிவிட்டது
எட்டாண்டுகள்
என் வாழ்வின்
எல்லா வண்ணங்களிலும் கரிப்படிந்து..

உன் அழைப்புகளுக்கு
மறுப்பின்றி இசைய வேண்டிய
அடிமையாகத்தான் பாவிக்கிறாய்
என்னை..

அத்தருணங்களில்
அருவருப்பூட்டும் உன் செயல்களை
எதிர்க்கும் துணிச்சலின்றி
உன் வக்கிர புரிவுகளை
சகிக்கிறேன்..

மிதம் மீறும் உன்
அருவருப்பு செய்கைகளை
தடைசெய்யும் தருணங்களில்
தரம் கெட்ட வார்த்தைகளால்தான்
என்னை தாக்குவாய் நீ..

என் பயத்தையும்
பலவீனத்தையும் நன்கு
ஆளத்தெரிந்த உன்னை
கையாளும் திறந்தான்
கைவரவில்லை எனக்கு..

உன் மூர்க்கதனங்களிலும்
முரட்டுதனங்களிலும்
என் பெண்மையும் அழகும்
சிக்குண்டு சிதைந்தொழிந்ததை தவிர
உன்னோடான என் இணைவும்
எனக்கு வேறொன்றும் பெற்றுத் தரவில்லை..

உன் இருப்பிள்ளைகளுக்கு
தாயானப் பிறகும்
தணியவில்லை
உன் வக்கிரங்களும்
அருவருப்பு செய்கைகளும்..

எந்த கடவுளின்
யாதொரு பரிகாரத்தாலும்
என் இழப்புக்கு ஈடு செய்ய இயலாது..

இனி உன் அருவருப்புகளையும்
சகிக்க முடியாது..

இந்த பிடி
உன் தாலி..

வெள்ளி, 6 மார்ச், 2009

சுயப்புலம்பல்




காதாடும் தோடுக்கும் கதப்பாடும் குழலுக்கும்
வாதாடும் இதழுக்கும் வட்டாடும் விழியினுக்கும்
தோதான உவமைகள் தொகைதொகையாய் எடுத்தெழுதும்
சாதாரண வாழ்வொன்றில் சரிந்துதிர்ந்து போவேனா

நயவுலகு ஆசைகளின் நயனத்தில் எனையிழந்து
வயமாகி வாழ்வினின்ப மயக்கத்தில் மூழ்கிமூழ்கி
தயவான உன்னன்பின் தண்மைதனை உணராத
பயன்கெட்ட பிறப்பென்ற பதத்தோடு சாவேனா

போதைதரும் பொருளெல்லாம் போகமென்று சேகரித்து
சூதைவிட கொடியவனாய் சுகத்துக்கு அலைந்தலைந்து
பாதையென்று பார்வைபட்ட பக்கமெல்லாம் போய்தோய்ந்து
வேதப்பொருள் உன்நினைவை வேண்டாமென் றுவிடுவேனா

முத்தணைக்கும் மங்கையரின் முறுவலுக்கு முன்விழுந்து
அத்தனைக்கும் முதலான ஐயுருவ பொருளுன்னை
சித்தணைத்து அருள்ஞான தத்துவத்தை அடையாமல்
பித்தளிக்கும் சிருங்கார பெருஞ்சேற்றில் புரள்வேனா

அங்கமெல்லாம் அண்டுகிற அந்தரங்க ஆசைகட்கு
தங்கமலர் தோகையரால் சிங்கார புனைவுசெய்து
சங்குஊதி சாமரமும் சங்கடப்ப டாதுவீசி
மங்குகிற ஆயுளதில் மங்கித்தேய்ந்து தீர்வேனா

எப்பழுதில் ஆழ்வேனோ எப்படித்தான் வாழ்வேனோ
முப்பாலின் முடிவுப்பாலில் முடிச்சுண்டு முடிவேனோ
அப்பாலுக்கு அப்பாலேகி அப்பழுக்கு அற்றவுந்தன்
கப்பலுக்கு காத்திருப்பே னோசொல்க பெரும்பொருளே!